மயில் மார்க் நிறுவனம் மீது அவதூறு!? காவல்துறையில் பங்குதாரர்கள் புகார்!

மயில் மார்க் சம்பா ரவை மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவன பங்குதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, கோவை மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து, மனுவும் அளித்துள்ளனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வன்னிய ராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் மயில் மார்க் என்ற பிராண்ட் பெயரில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக பருப்பு வகைகள், சம்பா ரவை, சேமியா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்களது தயாரிப்புகளில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வேதிப்பொருள்கள் கலப்படம் செய்து இருப்பதாக ஆதாரமே இல்லாத தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.கோவையைச் சேர்ந்த ரவி காந்த் என்பவர் தான் இந்தத் தகவலை பரப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது உணவுப் பொருட்களை தினமும் தாங்களே சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.