கியூபா… கியூபா தான்…

தனி பாலஸ்தீன நாடு அமைய வலியுறுத்தியும், இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்தும் கியூப அதிபர் மிகுவல் டையஸ் கேனல் தலைமையில் தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கியூப மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மாணவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கியூப அதிபர் மற்றும் அவரது கட்சியைச் சார்ந்த தலைவர்கள் பாலஸ்தீனியர்களின் கெஃபியே (keffiyeh) துண்டு அணிந்திருந்தனர்.
உலகின் முதன்முறையாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒரு நாட்டின் அதிபர் தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிகழ்வு கியூபாவில் அரங்கேறியுள்ளது. உலகில் 50க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் உள்ள நிலையில், எந்த நாட்டிலும் ஆட்சியாளர்கள் பாலஸ்தீனிய மக்களுக்காக களத்திற்கு வந்து போராட்டங்களை நடத்தவில்லை. அறிக்கை போர்களை மட்டுமே தொடுத்து வருகின்றனர்.இன்னும் குறிப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்த கூட யாரும் முன்வரவில்லை. போராட்டங்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தடையை மீறி பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அரபியர்களுக்கும் துணிவில்லை எனத் தெரிகிறது.
இஸ்ரேலை போர்குற்ற நாடாக அறிவிக்க கோரி, சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் தென் ஆப்ரிக்கா தொடர்ந்த வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராக கியூபா சேர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. கியூப மருத்துவக்கல்லூரிகளில், தொடர்ந்து பாலஸ்தீனிய மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும், 100க்கணக்கானவர்கள் மருத்துவர்களாக வெளியேறி வருகின்றனர். இது காசா போன்ற பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கு பேருதவியதாக இருந்து வருகிறது.