கள்ளச்சாராய இறப்புகள் – மேலும் பல லட்சம் நிதி உதவிகளை அறிவித்த முதலமைச்சர்!

கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் மேலும் பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர் அறிவித்துள்ளதாவது,
பெற்றோர் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவுகள், விடுதி செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும்.
பெற்றோர் இருவரையும் இழந்து வாடும் குழந்தைகளை பராமரிக்க அவர்களின் பாதுகாவலர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய், 18 வயது வரை வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்து வாடும் குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக, தலா 5 லட்சம் ரூபாய், நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும். 18 வயது ஆன உடன் அந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
பெற்றோரில் ஒருவர் மட்டும் இறந்திருந்தால், குழந்தைகளின் பெயரில் 3 லட்சம் வைப்புத் தொகை வழங்கப்படும்.
ஒருவரோ, இருவரையோ இழந்த குழந்தைகளுக்கு அரசின் அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
===