குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய, தமிழ்நாடு அறிவுரைக் கழகம் மறுத்ததையடுத்து, அவரது தாயார் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் உள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரிசீலித்து வந்த உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளது. எனினும் இது குண்டர் தடுப்பு சட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும், இது சவுக்கு சங்கர் தரப்புக்கு பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் சவுக்கு சங்கர் மீது, கஞ்சா கடத்தல், பெண் போலீசாரை தவறாக பேசியது போன்ற தனித்தனி வழக்குகள் உள்ளன.
தற்போது குண்டர் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால், பிற வழக்குகளிலும் ஜாமின் பெற முடியும் என சவுக்கு தரப்பு நம்புவதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்களை முன்வைத்து வந்தார் சவுக்கு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
====