ஜெருசலத்தில் பாதாள பதுங்கு அறை தயார் – குடும்பத்துடன் குடியேறும் நெதன்யாகு!

ஜெருசலத்தில் பாதாள பதுங்கு அறைகள்….
மனைவி, மகனுடன் குடியேறும் நெதன்யாகு…
20 ஆண்டுகளில் முதன் முறையாக பயன்படுத்தும் இஸ்ரேல்…
ஈரான் தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க நெதன்யாகு மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் தங்குவதற்கு, பாதாள சுரங்கம் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஊடகமான “வல்லா” வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த பாதாள சுரங்கம் முதன்முறையாக பயன்பாட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் 300 ராக்கெட்டுகள், டிரோன்களை வீசி தாக்கியபோதும் கூட, இந்த பாதாள சுரங்கத்திற்குள் நெதன்யாகு குடும்பம் செல்லவில்லை. ஆனால் தற்போது, ஈரான் கடும் தாக்குதல் நடத்தும் என அச்சம் எழுந்துள்ளதால், இந்த பாதாள சுரங்கத்தை பிரதமர் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் பயன்படுத்த உள்ளதாக அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பல நாட்களுக்கு தங்குவதற்கு ஏற்ப இந்த பாதாள சுரங்கத்தில் அறைகள் மற்றும் வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதாள சுரங்கத்திற்கு தேசிய மேலாண்மை மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் இருந்து, டெல் அவிவில் உள்ள ஆக்கிரமிப்பு ராணுவத்தின் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு, உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காசா மீதான போரை எதிர்த்து, ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வலிந்து, தாக்குதல் நடத்தி வரும் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சர்கள், பதிலடியின் போது, பாதாள அறையில் பதுங்குவது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலிய பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், போர் ஆர்வத்துடன் சுற்றித் திரியும் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சர்கள் மட்டும் எப்படி தங்கள் உயிரை காப்பற்றிக் கொள்ள துடிக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
========