🔴 BREAKING: அதிகரிக்கும் நெருக்கடி – ஆதீனம் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போலீசில் புகார்!
துரிதமாக களமிறங்கிய காவல்துறை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதனை வெளியிட்டு, ஆதீனத்தின் அவதூறுகளை அம்பலப்படுத்தியுள்ளனர்

கார் விபத்து தொடர்பாக மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பொய் செய்தி பரப்பிய மதுரை ஆதீனம், சிசிடிவி காட்சிகள் மூலம் வசமாக சிக்கியுள்ளார். இதன் மூலம் புகழ்பெற்ற மதுரை ஆதீன மடத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு கார், பேரி கார்டுகளை இடித்துக் கொண்டு, வந்து, தன் கார் மீது மோதியதாகவும், இடித்தவர்கள், தொப்பி அணிந்து, தாடி வைத்திருந்ததாகவும், அவர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படாது, காரணம் அவர்கள் சிறுபான்மையினர், அவர்களுக்குத் தான் எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது, பிறகு அப்படித் தான் இருப்பார்கள் என வாய்க்கு வந்த படி, வதந்திகளை பரப்பினார் மதுரை ஆதீனம். அவரது கூற்றுக்கு ஆதரவாக அவருடன் இருந்த ஒருவரும் தொலைக்காட்சிகளுக்கு அவதூறு பேட்டி அளித்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், துரிதமாக களமிறங்கிய காவல்துறை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதனை வெளியிட்டு, ஆதீனத்தின் அவதூறுகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.
அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மாருதி நிறுவனத்தின் சிறிய ரக கார் ஒன்றில் சிலர் மெதுவாக வருவதும், ஆதினத்தின் FORTUNER கார் அதி வேகமாக சென்று, மாருதி காரின் பக்கவாட்டில் உரசிச் செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இதன் மூலம் பேரி கார்டுகளை உடைத்துக் கொண்டோ, அதிவேகமாகவோ, மாருதி காரில் யாரும் வரவில்லை என்பது தெளிவானதோடு, ஆதினத்தின் ஓட்டுநர் தான் எதிர் தரப்பினரின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் அதிவேகமாக சென்றது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமாகியுள்ளது.
இதனிடையே ஆதீனத்தின் ஓட்டுநர் மீது உளுந்தூர் பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மத வன்முறையை தூண்டும் வகையில், பேசிய ஆதீனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ள தகவல் பரபரப்புச் செய்தியாகியுள்ளது.