இந்தியா

போலே பாபாவின் சொத்து மதிப்பு ரூ. 100 கோடி!

121 பேரை பலி கொண்ட போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி….
நடவடிக்கையில் இருந்து தப்பிய போலே பாபா…..
20 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது அம்பலம்…

போலே பாபா என்று அழைக்கப்படக் கூடிய தன்னிச்சை சாமியார் சுராஜ் பால் கடந்த 20 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் 121 பேர் பலியான வழக்கில், காவல்துறையின் விசாரணையின் போது, இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

இவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இவருக்கு இருக்கும் சக்தி மூலம் தங்களது குடும்பப் பிரச்னைகள் தீரும் என அவரது பக்தர்கள் நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை தான் உ.பி. மருத்துவமனைகளில் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டதற்கும், மக்களின் கூக்குரலுக்கும் காரணமாக அமைந்தது.

இவரது ஆசிரமம் மிகப்பெரிய மாளிகையாக அமைந்துள்ளது. 5 நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக சுமார் 4 கோடி ரபாய் செலவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை ஒரு பக்தர், பாபாவுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

ஆசிரமத்தை ஒட்டிய சுமார் 30 ஏக்கர் இடத்தை பாபா குத்தகைக்கு எடுத்துள்ளார். பாபாவின் அறக்கட்டளைக்கு சொந்த மான இடங்கள், கஷ்கஞ்ச், ஆக்ரா, கான்பூர் மற்றும் குவாலியர் ஆகிய ஊர்களில் உள்ளன. சொகுசு வாழ்க்கையை விரும்பக் கூடிய பாபா பல விலையுயர்ந்த கார்களை, பக்தர்களின் பெயர்களில் பதிவு செய்து பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை போலே பாபா ஹத்ராஸ் அருகே உள்ள கிராமத்தில் நடத்திய ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, முதல் தகவல் அறிக்கையில் பாபாவின் பெயரை குறிப்பிடவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்ன போலே பாபா, தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். சமூக விரோத சக்திகளின் செயல்பாட்டால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும், தனது மனைவிக்கும் தெய்வ சக்தி இருப்பதாக குறிப்பிட்டு வந்த போலே பாபா, தனது காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசினால், குடும்ப பிரச்னைகள் தீரும் என பிரச்சாரம் செய்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, அவரது காலடி மண்ணை எடுப்பதற்காக பக்தர்கள் முண்டியடித்த போது தான் இந்த நெரிசல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button