காசா பெண் மருத்துவர் முன்பு கொண்டு வரப்பட்ட குழந்தைகளின் உடல்கள்!

தான் பெற்ற 10 குழந்தைகளில், 9 பேரை சடலமாக கண்ட காசா பெண் மருத்துவரின் கண்ணீர் உலகத்தை உலுக்கியுள்ளது.60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலால், தங்களது சந்ததிகள் அழிந்து விடாமல் இருக்க, முடிந்த அளவுக்கு அதிக குழந்தைகள் பெற்று வருகின்றனர் பாலஸ்தீனியர்கள். அந்த வகையில் காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஹம்தி அல் நஜ்ஜார், அவரது மனைவி மருத்துவர் அலா ஆகியோருக்கும் 10 குழந்தைகள் உள்ளனர்.மருத்துவ தம்பதிகள் இருவரும் கான்யூனிசில் உள்ள நாசர் மருத்துவமனையில் பணி புரிந்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இரவு பகல் பாராமல் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் மருத்துவர் அலா, மருத்துவமனையில் வேலையில் இருந்த போது, அவரது வீட்டின் மீது ஆக்கிரமிப்பு படை குண்டு வீசியது. இதில் அலாவின் கணவர், மருத்துவர் ஹம்தி அல் நஜ்ஜார் மற்றும் அவரது 10 குழந்தைகளும், மண்ணோடு மண்ணாக புதைந்தனர்.
இதில் 9 குழந்தைகள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து விட்டனர். மருத்துவர் ஹம்தி அல் நஜ்ஜார் மற்றும் ஒரு ஒரு குழந்தை மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பி, மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.ஒரு பக்கம் உயிருக்கு பேராடும் கணவர், மறுபக்கம் ஒரு குழந்தை, மற்றொரு புறம் அடையாளம் காண முடியாத அளவு சிதைக்கப்பட்ட 9 குழந்தைகளின் உடல்கள் என, ஒரே நேரத்தில், மருத்துவர் அலாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
தனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் நிலையை பார்த்து, அவர் கதறி கண்ணீர் வடித்த நிகழ்வு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.