ஆதித்யாநாத்தால் புகழ்ந்து தள்ளப்பட்ட படகு ஓட்டுநர் – மாபெரும் கிரிமினல் எனத் தகவல்!

கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் பல லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தம்பட்டம் அடித்து வருகிறார். தனது கூற்றுக்கு ஆதாரமாக அவர் சுட்டிக்காட்டிய நபர் தான் பின்டு மஹரா என்ற படகு உரிமையாளர் ஆவார். இவரது குடும்பம் 45 நாளில் 30 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக யோகி ஆதித்யாநாத் பெருமையாக பேட்டி அளித்தார்.தற்போது இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. கும்பமேளாவை வெற்றி நிகழ்ச்சியாக காட்ட யோகி ஆதித்யா நாத் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக எதிர்கட்சிகள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வருகின்றன.குறிப்பாக பின்டு மஹாரா என்பவர் படகு ஓட்டுவதன் மூலம் சம்பாதிக்கவில்லை என்றும், அவர் மட்டுமின்றி, அவரது குடும்பமே பெரும் கிரிமினல் கும்பல் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கடத்திப் பணம் பறிப்பது, மிரட்டிப் பணம் பறிப்பது, கள்ளக் சாராய விற்பனை போன்ற சட்ட விரோத காரியங்கள் மூலம் பிண்டு மஹாரா மட்டுமின்றி, அவரது குடும்பமே மாபெரும் கிரிமினல்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 60 போட்களை வைத்திருந்த அவர், புதிதாக 70 போட்களை வாங்கி, மொத்தம் 130 போட்களை ஓட்டியுள்ளார். எப்படி இருந்தாலும், அவரால் இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது என்பதை, பிற படகு ஓட்டுநர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவும், எதிர்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனவே சட்டவிரோத செயல்கள் மூலம் சம்பாதித்த பணத்தை, கும்பமேளா வருமானம் என்ற பெயரில் போலியாக அவர்கள் கணக்கு காட்டியுள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.தான் சம்பாதித்த பணத்திற்கு ஜிஎஸ்டி, உள்ளிட்ட பிற வரிகளை அவர் முதலில் கட்டியுள்ளாரா என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.