அரசியல்

ஜார்க்கண்ட் தேர்தலில் 68 சீட்டுகளில் 33 சீட்டுகளை குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுங்கிய பாஜக!

பாஜகவில் பிரதமர் மோடி முதல் அமித் ஷா வரை வாய்க்கு வாய் குடும்ப அரசியலை விமர்சித்து பேசி வரும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதே குடும்ப அரசியலை செய்திருக்கிறது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி என தனக்கு எதிரான கட்சிகளை குடும்ப அரசியல் செய்கிறார்கள், வாரிசுகளுக்கு பதவி கொடுக்கிறார்கள் என்றெல்லாம் மேடைக்கு மேடை பாஜக விமர்சித்து வருகிறது. மற்றொருபுறம் “இது மன்னர் ஆட்சி அல்ல… ஜனநாயக இந்தியா… இங்கு எல்லோரும் மன்னர்கள்”.. என பக்கம் பக்கமாக டைலாக் பேசிக்கொண்டே, சத்தமே இல்லாமல் தனது கட்சிக்குள் பாஜக குடும்ப அரசியலை வளர்த்து வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆம், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சீட்டு வழங்கியுள்ள 68 வேட்பாளர்களில் 33 பேர் முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டாவிற்கு பெட்காவி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு முன்னாள் முதல்வரான மதுகோடாவின் மனைவி கீதா கோடாவிற்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மதுகோடா நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் குற்றவாளி என தண்டனை பெற்றதையடுத்து அவரது மனைவியை களமிறக்கி வாக்கு பெற பாஜக முயற்சிக்கிறது.

அதேபோல் ஒடிசா ஆளுநராக இருக்கும் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸின் மருமகள் பூர்ணிமா தாஸ், தனது சகோதரனைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்ற முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங்கின் மனைவி ராகினி சிங், சிந்த்ரி எம்.எல்.எ. இந்திரஜித் மஹதாவின் மனைவி தாரா தேவி என குடும்ப உறுப்பினர்களாக பார்த்து பார்த்து சீட் கொடுத்துள்ளது.

இதில் அதிகபட்ச காமெடியாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் குடும்ப அரசியல் நிலவுகிறது என குற்றம்சாட்டி, பாஜகவில் தஞ்சம் புகுந்த முன்னாள் முதல்வரான சம்பாய் சோரன் அவரது பாரம்பரிய தொகுதியான செரைகேலாவில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது மகன் பாபுலாலுக்கு பாஜகவிடம் அனுமதி வாங்கி காட்ஷிலா தொகுதியில் போட்டியிட களமிறங்கியுள்ளார்.

கட்சிக்கு எவ்வித பங்களிப்பையும் செய்யாதவர்களுக்கும், குற்ற வழக்கில் சிறை சென்றுவிட்டு வந்தவர்களின் நெருங்கிய சொந்தங்களுக்கும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது, கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button