
மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை இழந்த பாஜக…
கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு இல்லாமல் எந்த சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது…
ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், மக்களவை, மாநிலங்களவையில் அச்சட்டத்தை முதலில் நிறைவேற்ற வேண்டும். தற்போது, மக்களவையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, ஏக் நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் தான் எந்தச் சட்டத்தையும் மக்களவையில் நிறைவேற்ற முடியும். ஆனால் மாநிலங்களவையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைத்தும் சேர்ந்தால் கூட, பெரும்பான்மை இல்லை.
மாநிலங்களவையின் தற்போதைய பலம் 226. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 114. பாஜக இப்போது, 86 எம்.பிக்களை மட்டுமே வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101. இந்தியா கூட்டணியின் பலம் 87.
தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி ஆகிய இந்த 2 பிரதான கூட்டணிகளை சேராத எம்.பி.க்கள் 29.
நியமன எம்.பி.க்கள் 7 பேர்.
தற்போது மாநிலங்களவையில் 19 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் பெரும்பாலானவற்றை பாஜக அல்லது அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றினால் மட்டுமே, வரும் 5 ஆண்டுகளில் எந்தச் சட்டத்தையும் சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும்.
இல்லாவிட்டால் பெரும் நெருக்கடியை பாஜக சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த மாநில இடைத்தேர்தல்களில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.