மிகப்பெரும் தோல்வி எதிரொலி – 200 நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!

பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து, பொது வேலை நிறுத்தம்…
மருத்துவத்துறை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு..
பணய கைதிகளை மீட்கத் தவறியதற்கு கடும் கண்டனம்…
இஸ்ரேல் பணயகைதிகள் 6 பேரின் உடல்கள் காசாவில் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு, போர்க்குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் 6 பேரும் இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை மீட்கச் செல்லும் போது, அவர்கள் முன்கூட்டியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
பணய கைதிகளை உயிருடன் மீட்கக் கோரி, கடந்த 300 நாட்களாக அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போர் வெறி பிடித்த நெதன்யாகு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார்.
இந்நிலையில் பணய கைதிகள் உடல்களாக இஸ்ரேல் திரும்பிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் பெரு நிறுவனங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், பணய கைதிகளை உடனடியாக மீட்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்தில் நெதன்யாகு கையெழுத்திட வலியுறுத்தி, திங்கட்கிழமை நாட்டின் 200 பெரும் நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மருத்துவ தொழிற்சங்கமான The White Coats அமைப்பும் திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது.
முன்னதாக உயிரிழந்த 6 பணயக் கைதிகளின் குடும்பத்தினருடன் பேசுவதற்கு நெதன்யாகு முற்பட்ட போது, 2 கைதிகளின் குடும்பத்தினர் நெதன்யாகுவுடன் பேச முடியாது என கூறிவிட்டனர். ஒரு கைதியின் குடும்பத்தினருடன் பேசிய நெதன்யாகு, மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
நெதன்யாகுவிற்கு எதிராக ஊழல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நிலவும் சூழலில் தேர்தல் நடைபெற்றால் படுதோல்வியை சந்திப்பார் என கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து, போரை அவர் நடத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தனி நபர் ஒருவரின் பதவி வெறிக்காக, காசாவில் சுமார் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பது பெரும் வேதனை.
=============