அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து விலகிய ஜோ பைடன்! கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு!
கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வென்றால், முதல் ஆசிய, ஆப்ரிக்க வம்சாவளி பெண் அதிபர் என்ற பெருமையை அடைவார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் 81 வயதான ஜோ பைடன், அண்மைக் காலமாக புத்தி தடுமாற்றப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். பொது இடங்களில் சுய நினைவு இழந்து பேசி வருகிறார். இதனால் டொனால்டு டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆனது.
இது ஆளும் ஜனநாயக கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து, ஜே பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியில் இருந்தே குரல்கள் எழுந்தன. இந்தச் சூழலில், தான் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
எஞ்சிய காலம் தான் அதிபராக தொடர்வதாகவும், அடுத்த தேர்தலில் தன் சார்பாக துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஜனநாயக கட்சியினர் முழு ஆதரவு கொடுத்து, டிரம்பை வீழ்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், ஒரு முறை அதிபராக பதவியில் இருந்தாலும், 2 முறை அதிபர் பதவிகளை வகித்தவர்கள் செய்த பணியை விட, கூடுதலாக ஜோபிடன் செய்து காட்டியுள்ளதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வென்றால், முதல் ஆசிய, ஆப்ரிக்க வம்சாவளி பெண் அதிபர் என்ற பெருமையை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது.