பாகிஸ்தான் வாரியத்தை விட குறைவான ஓய்வூதியம் வழங்கும் பிசிசிஐ!

உலகின் மிகப்பெரிய 2வது பணக்கார விளையாட்டு அமைப்பு பிசிசிஐ. இதன் கடைசி ஒரு ஆண்டு வருமானம் மட்டும் 18,760 கோடி ரூபாய்.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒரு ஆண்டு வருமானம் வெறும் 466 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்.உலக கிரிக்கெட்டையே தற்போது கட்டுப்படுத்தும் அமைப்பாக பிசிசிஐ மாறியுள்ளது. ஆனால் இது 100 சதவீதம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு அல்ல. தனியாரின் ஆதிக்கம் நிறைந்த அமைப்பு. இந்நிலையில் பிசிசிஐ முன்னாள் வீரரான காம்ப்ளிக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் அளிப்பதாக செய்திகள் வெளியாகின. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காரணம் இந்தியாவை விட மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட பாகிஸ்தானில் கூட, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தை வழங்குவதாக கூறப்படுகிறது.
உதாரணமாக முன்னாள் வீரர் அப்ரிடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் மதிப்பில் 1 லட்சத்து, 54 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. இந்திய மதிப்பில் அது குறைவு என்றாலும், பாகிஸ்தானின் வாழ்க்கைத் தரத்தை பொருத்தவரை அது ஒரு கவுரவமான தொகை ஆகும்.அப்படி இருக்கும் போது, காம்பிளி உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு ஏன் குறைவான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.பிசிசிஐ தனது பண இருப்பை வீரர்களுக்கும் பயன்படும் வகையில் செலவு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே நேரம் பிசிசிஐ அதிகாரிகள் தனது குடும்பத்தை தொடர்பு கொண்டுள்ளதாக காம்ப்ளி கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.