எங்கோ இருக்கும் போலார் கரடிகளால் உலக மக்களுக்கு இவ்வளவு நன்மைகளா?

போலார் பீர் எனப்படக்கூடிய பனிக்கரடிகள் பார்ப்பதற்கு அழகானவை. இந்தக் கரடிகள் பனிப்பிரதேசத்தில் வாழக்கூடியவை. எங்கோ வாழக்கூடிய இந்தப் பனிக்கரடிகள் உலக மக்களுக்கு பல பயன்களைத் தந்து வருகின்றன. இன்று உலக வெப்பமயமாதல் என்பது முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்த உலக வெப்பமயமாதல் குறித்த அபாய ஒலியை எழுப்பக்கூடியவையாக இந்த போலார் கரடிகள் உள்ளன.ஆர்டிக் உள்ளிட்ட பனிப்பிரதேசங்களின் பனிமலைகள், உருகினால், கடல் பரப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை உலக மக்கள் சந்திக்க நேரிடும். இந்த பனிப்பிரதேசங்களின் இயற்கை சூழற்சி, உணவுச் சுழற்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவை இந்த பனிக் கரடிகள்.
பனிக்கரடிகளின் முக்கிய உணவு சீல். இந்த சீல்களின் உணவு மீன்கள். சீல்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அவை மீன் வளத்தை குறைத்து விடும். இதனால் கடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இது மனிதர்களை பாதிக்கும். எனவே சீல்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் செல்ல, அவற்றை உணவாக உட்கொள்கின்றன பனிக்கரடிகள். எனவே இயற்கை சமநிலையை பராமரிப்பதில், பனிக்கரடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.உலக வெப்பமயமாதலால், பனிக்கரடிகளின் வேட்டை பரப்பு குறைந்து வருகிறது. அதாவது, பனிக்கட்டிகள் உருகுவதால், பனிக்கரடிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
ஒன்று, கடலில் நீண்ட தூரம் நீந்திச் சென்று, தனது இறையை தேட வேண்டும். அல்லது, தரையில் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். தரையில் உண்ணும் நிலை வந்தால், சக ஊண் உண்ணிகளான நரிகள் உள்ளிட்ட விலங்குகளையும் கரடிகள் வேட்டையாட நேரிடும்.நீண்ட தூரம் நீந்திச் சென்று வேட்டையாடினால், உடல் சக்தி குறைந்து, அழிவுக்கு வழிவகுக்கும். எனவே வெப்பமயமாதலின் முதல் பலி பனிக்கரடிகளிடம் இருந்து தொடங்குகிறது. 2100ஆம் ஆண்டு பனிக்கரடிகள் முழுவதுமாக அழிந்துவிடும் என சில ஆராய்ச்சிகள் சொன்னாலும், இயற்கை தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதால், இப்படி நிகழ சாத்தியமில்லை என வேறு சில ஆராய்ச்சிகள் ஆறுதல் அளிக்கின்றன.