இஸ்ரேலை ஆதரிப்பதில், பிற நாடுகளை விட அரபு நாடுகள் முன்னிலை! ஹவுத்தி தலைவர் காரசார புகார்!

காசாவில் கடந்த 320 நாட்களுக்கும் மேலாக நடக்கும் கொடுமைகளை, அரபு நாடுகளின் தலைவர்களும், உலக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், ஆளுமைகள் கண்ணை திறந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஏமன் ஹவுத்திப் படைகளின் தலைவர் சையத் அப்துல் மாலிக் அல் ஹவுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவரது உரையில் கூறியுள்ளதாவது, பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டிய கடமை உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களின் மார்க்க கடமை ஆகும்.
உலகம் முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்கள், முக்தி பெற்ற அறிஞர்கள், தங்கள் கண்களை திறந்து பார்த்து, பாலஸ்தீன பிரச்னை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
அல் அக்ஸா மசூதியை காப்பது, பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே கடமையல்ல, அனைவர் மீதும் கடமை என்று தெரிந்தும், அமைதியாக இருப்பதன் மூலம் நீங்களும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு உடந்தையாக இருக்கின்றீர்கள்.இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதி செய்வதை கொலம்பியா அதிபர் தடுத்து நிறுத்தி, தடை விதித்துள்ளார். ஆனால் நிறைய அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு தீவிரமாக தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.பாலஸ்தீன் ஆதரவாளர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது, சிறையில் அடைப்பது, நாடு கடத்துவது போன்ற வேலைகளைக் கூட சில அரபு நாடுகள் செய்து வருகின்றன.
முஸ்லீம் நாடுகள் அல்லாத பிற நாடுகள் பாலஸ்தீனை ஆதரிக்கும் அளவிற்கு கூட சில அரபு முஸ்லீம் நாடுகள் ஆதரிப்பதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட சன்னிப் பிரிவு அரபு முஸ்லீம் நாடுகள் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருவது, உலக இஸ்லாமியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.