இந்தியா

இரும்பு பெண்மணி பில்கீஸ் பானுவுக்கு மீண்டும் ஒரு வெற்றி! குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான கலவரம் உலகையே உலுக்கிய ஒன்று. பாரதிய ஜனதா கலவர கும்பலிடம் இருந்து தப்பி, பில்கீஸ் பானு குடும்பத்தினர் 17 பேர் டிரக் ஒன்றில் ஏறிச் சென்றபோது, 30 நபர்கள் அடங்கிய கும்பல் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது.

பில்கீஸ் பானு அப்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு வயது 19. 2 வயது குழந்தையை வைத்திருந்தார். அந்த குழந்தையை அந்த கும்பல் தலையை பாறையில் மோதி, சிதைத்து கொன்றது. அங்கிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

பில்கீஸ் பானு கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும் கூட அவரை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவரது உடைகளை களைந்து, நிர்வாணமாக உயிருக்கு போராடிய நிலையில் விட்டுச் சென்றனர். அவரும் இறந்து விடுவார் என நினைத்துள்ளனர்.

3 மணி நேரம் கழித்து, மயக்கம் தெளிந்து எழுந்த பில்கீஸ் பானு, தனது குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு, அங்கு சிறிய உடையை எடுத்து, அணிந்து கொண்டு, மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பழங்குடியின குடும்பம் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இதனையடுத்து, தனக்கு நேர்ந்ததை அவர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகாராக பதிவு செய்துள்ளார். ஆனால் கீழ் நீதிமன்றம், அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து மனித உரிமைகள் ஆர்வலர்களின் உதவியுடன், தேசிய மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

சாட்டையை சுழற்றிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வகை செய்தது. இதனையடுத்து வழக்கை சிபிஐ கையில் எடுத்து, குற்றவாளிகள் 20 பேரை அதிரடியாக கைது செய்தது. புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியடுக்கப்பட்டன.

சிபிஐ குற்றம் சுமத்திய 20 பேரில், மருத்துவர், காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த 2022ஆம் ஆண்டு, குஜராத் பாஜக அரசு குற்றவாளிகளை கருணை அடிப்படையிலும், நன்னடத்தை அடிப்படையிலும் விடுதலை செய்தது. இது நாடுமுழுவதும் பெரும் விவாதமாக மாறியது. இதனையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தனது சட்டப்போராட்டைத் தொடர்ந்தார் பில்கீஸ் பானு.

இதனையடுத்து குற்றவாளிகள் விடுதலை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்களது விடுதலை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, குற்றவாளிகளில் 2 பேர் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த வழக்கை பரிசீலித்த நீதிபதி சஞ்சய் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வு குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பில்கீஸ் பானுவுக்கு எதிராக பல மிரட்டல்கள், பேரங்கள் பேசப்பட்ட நிலையில், தொடர்ந்து அனைத்தையும் எதிர்கொண்டு, குற்றவாளிகளுக்கு ஜனநாயக முறையில் தண்டனையை பெற்றுத் தந்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் மட்டும் தனது வீட்டை 20 முறை மாற்றியவர். இருந்தும் சட்டப் போராட்டத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button