மீண்டும் ஒரு சர்ச்சை

சம்பால் பள்ளிவாசலை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகராறுக்குரிய கட்டிடம் கூறி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலில் உள்ள ஷாகி ஜமா பள்ளிவாசல் 1526ஆம் ஆண்டு மொகலாய மாமன்னர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.இதனால் தொல்லியல் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக கருதப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மசூதி, கோவிலை இடித்து கட்டப்பட்டதாக பாஜக ஆதரவு அமைப்புகள் வழக்கு தொடர்ந்து, அந்த மசூதியை ஆய்வு செய்ய அரசு அதிகாரிகள் முயன்ற போது, அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.இதனையடுத்து, அவர்களை தடியடி, கண்ணீர் புகை குண்டு, காலுக்கு கீழ் சுடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், ரமலான் மாதத்தையொட்டி, பள்ளிவாசலை தூய்மை செய்யவும், வெள்ளை அடிக்கவும், பள்ளிவாசல் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், இதற்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை.இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அங்கு எதிர்மறையான கருத்து ஒன்றை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அதாவது, அந்த கட்டிடத்தை பள்ளிவாசல் என அழைக்கக் கூடாது என பாஜக ஆதரவு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய தோடு, அப்படி அழைத்தால், அந்த கட்டிடத்தை தங்கள் தரப்பு கோவில் என்று அழைப்போம் என்றும் கூறினார்.
இதனையடுத்து, அந்த கட்டிடத்தை தகராறுக்குரிய கட்டிடம் என்ற புதிய வார்த்தையால் நீதிபதி குறிப்பிட்டார். பாபர் மசூதியும் இப்படி தான் தகராறுக்குரிய கட்டிடம் எனக் குறிப்பிடப்பட்டது. இது சம்பால் இஸ்லாமியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.