காசாவில் ஒரு முட்டை ரூ. 184, ஒரு கிலோ வெங்காயம் 4600, ஒரு கேஸ் சிலிண்டர் ரூ. 50,000!

காசாவில் விண்ணை தொட்ட விலைவாசி…
ஒரு முட்டை ரூ.184 ரூபாய்க்கும்… ஒரு கிலோ வெங்காயம் 4600 ரூபாய்க்கும் விற்பனை…
சமையல் சிலிண்டர் 50,000 ரூபாய்க்கு விற்பனை…
காசாவில் கொல்லப்பட்டவர்களின் துயரங்களை விட, உயிர் வாழ்பவர்களின் நிலை மேலும் துயரமாக மாறியுள்ளது. கடந்த 10 மாதங்களாக நடைபெறும் போரில் உயிர் பிழைப்பதற்காக அங்கும், இங்கும் இடம் பெயர்ந்து வரும் மக்களிடம், செலவுக்கு பணம் எப்படி இருக்க முடியும். கடந்த 70 வருடங்களாக முற்றுகையிடப்பட்ட நிலப் பகுதி.
இதில் 10 மாதங்களாக நீடிக்கும் தாக்குதலால், எந்த வேலை வாய்ப்புகளும் இல்லை. முழுக்க முழுக்க ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் கொடுக்கும் நிவாரணங்களை மட்டுமே நம்பி இருந்தனர். இந்தநிலையில், ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு அளித்து வந்த நிதியை, அமெரிக்க கூட்டணி நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால் அந்த அமைப்பும் உதவ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காசாவில் நிலவும் சூழல்கள் குறித்து, NRC எனப்படும் Norwegian Refugee Council முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. காசா உலகத்தின் இயல்பு நிலையில் இருந்து முற்றிலும் மாற்றப்பட்ட நிலமாக மாறியுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
காசாவில் சேதம் அடையாத அல்லது முற்றிலும் அழிக்கப்படாத ஒரு மருத்துவமனையும் இல்லை எனக் கூறியுள்ளது. எந்த விதமான அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாத சிறிய கிளினிக்குகள் மட்டுமே செயல்படுகின்றன. அங்கு வரும் கூட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களோ, அல்லது இருக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருளோ இல்லாததால், கழுதை வண்டிகள் மூலமாகவே மக்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
தெருக்களில் சாக்கடை வழிந்தோடுகிறது. குடிநீர் தொட்டிகள், பைப்புகள், சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. மக்களின் கைகளில் எந்த பணமும் இல்லை. இந்த சூழலில் விலைவாசி உச்சத்தில் உள்ளது என என்.ஆர்.சி அமைப்பின் அமைப்பின் மேலாளர் Salma Altaweel தெரிவித்துள்ளார்.
ஒரு முட்டை 2.2 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் 184 ரூபாய். ஒரு கிலோ வெங்காயம் 55 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இந்திய மதிப்பில் 4600 ரூபாய். ஒரு லிட்டர் சமையல் எரிவாயு சிலிண்டர் 41 டாலர்கள். நம் நாட்டில் பயன்படுத்தப்படும். 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் காசாவில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இதனை வாங்கும் அளவுக்கு அங்கு யாருக்கும் வசதி இல்லை. பிறநாடுகளில் நடைபெறும் போர்களுக்கும் காசா தாக்குதலுக்கும் பெரிய வித்தியாசம். மக்கள் எங்கும் வெளியேற முடியாதவாறு இடப்பட்டுள்ள முற்றுகை தான். அனைத்து பக்கமும் இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது. எகிப்து வழியாக வெளியேற அந்த நாடும் அனுமதிக்கவில்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழல் பாலஸ்தீனியர்கள் அகப்பட்டுள்ளனர்.
====