கலீலியை கைப்பற்றும் முயற்சி!

தங்களது ரத்வான் படைப்பிரிவு தலைவர் இப்ராஹிம் அக்கில் வீர மரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ரத்வான் படைப்பிரிவின் பணி என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.ஹிஸ்புல்லாவின் மூத்த ராணுவத் தலைவர் ஹாஜி ரத்வான் என்பவரின் பெயரில் உருவாக்கப்பட்ட special operations forces தான் ரத்வான் படைப்பிரிவு. தேவைப்படும் நேரங்களில் பல கட்ட கண்காணிப்புகள், தாக்குதல்களையும் மீறி, இஸ்ரேலுக்குள் பல முறை நுழைந்த அமைப்பு தான் ரத்வான் படை.
இஸ்ரேலுக்குள் சென்று குறிப்பிட்ட இடங்களை தாக்குவது, ராணுவத்தினரை பணய கைதிகளாக பிடித்துக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்பு இந்த படை மேற்கொண்டுள்ளது.

இந்தப் படையில் மொத்தம் 2500 வீரர்கள் உள்ளனர். ஒரு யூனிட்டிற்கு 10 பேர் அடிப்படையில், 200க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் உள்ளன. உடல் மற்றும் மனரீதியிலான கடும் பயிற்சிகளுக்கு பிறகே இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.ஸ்னைப்பர் பயிற்சி, பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை கையாளுதல், வெறும் கைகளால் சண்டையிடுதல், வெடிமருந்துகள் பற்றிய பயிற்சி, போர் சூழலில் வாகனங்களை கையாளுதல், எதிரிகளிடம் சிக்கும் போது, நடந்து கொள்ளும் முறை, நீண்ட தூர ஓட்டம், மலை ஏறுதல், டேக்டிகல் போர் பயிற்சி, சைபர் பயிற்சி உள்ளிட்ட, உலக நாடுகளின் அதி உயர் கமாண்டோ பிரிவுகளுக்கான அனைத்து பயிற்சிகளும், இந்த படைப்பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.வழக்கமாக இந்த பிரிவினர் தங்களது முகத்தை மறைக்கும் வகையிலான முழு கருப்பு உடைகளை அணிகின்றனர். இஸ்ரேலின் கலீலி பகுதியை கைப்பற்றும் திட்டத்தின் போது, தான் இப்ராஹிம் அக்கில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்.