அமெரிக்காவின் சிம்ம சொப்பனம்!

ஹிஸ்புல்லாவின் பிரபலத் தலைவர் இப்ராஹிம் அக்கில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு விமான குண்டு வீச்சில் வீர மரணம் அடைந்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மேலும் 14 முக்கியத் தலைவர்கள் ரத்த சாட்சியானதோடு, 66 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா ராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கலீலீ பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில், பாதாள அறையில், அதற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அறிவித்துள்ளது.ஹிஸ்புல்லாவின் அதிஉயர் படைப்பிரிவான ரத்வான் படையின் தலைவராக இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 58 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்த ஏகாதிபத்திய அமெரிக்கா, இவரை சர்வதேச உயர்மட்ட தீவிரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது. இதற்கு காரணம், அமெரிக்காவிற்கு எதிராக இவர் நடத்திய வேட்டை தான்.
1980ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பில் இணைந்த இப்ராஹிம் அக்கில், அந்த அமைப்பின் வெளிநாட்டு பிரிவு தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது முதலே, இவர் நிழல் மனிதராக அறியப்படுகிறார். பொது இடங்களில் இவரை யாரும் பார்த்ததில்லை. இவரது சில புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது.1983ஆம் ஆண்டு இவர் தலைமையில் நடைபெற்ற 2 தாக்குதல்கள் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் நடுநடுங்கச் செய்தது.பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க கடற்படைத் தளத்தில் இவர் தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில், 241 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.பின்லேடனுக்கு முன்பே அமெரிக்காவை அதிர வைத்தவர்களில் முக்கியமானவர் இப்ராஹிம் அக்கில்.பேஜர் தாக்குதலில் இலேசான காயம் அடைந்த இவர், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு விமான குண்டு வீச்சில் தற்போது, கொல்லப்பட்டுள்ளார்.