“நாங்கள் உதவவில்லை – எங்களுக்கு எதுவும் தெரியாது” இஸ்மாயில் ஹனியே சம்பவம் பற்றி அமெரிக்கா கருத்து!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை…
இஸ்ரேலுக்கு உதவவும் இல்லை, முன் கூட்டியே எதுவும் தெரியாது…
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்ட மறுப்பு…
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடைபெற்ற தாக்குதலில் உயிர் தியாகம் அடைந்த நிகழ்வு முஸ்லீம் உலகத்தை உலுக்கியுள்ளது. இதற்கு பழி தீர்ப்பதற்காக பல தரப்பினரும் கங்கணம் கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டணி பிளிங்கன், இந்த தாக்குதலில் தாங்கள் இஸ்ரேலுக்கு உதவவில்லை என்றும், இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என கைவிரித்துள்ளார்.
அதே நேரம் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாட் ஆஸ்டின் இதுப்பற்றி கூறும் போது, இந்தச் சம்பவம் மூலம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவும் என அறிவித்துள்ளார். எப்படி ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கு உதவி செய்தோமோ அதே போன்று உதவுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல ஏவுகணைகளை அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகள் வழியிலேயே தடுத்து வீழ்த்தியதாக கூறப்பட்டது. அதனைக் குறிப்பிட்டு, தற்போதும், இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் என லியாட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பெரும் போர் வெடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்து இருப்பதாகவும், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் நிலவும் சூழல் கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை தெரிவித்துள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேல், தாங்கள் போரை விரும்பவில்லை என்றும் அதே நேரம் எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
=====