இஸ்ரேலுக்கு 50,000 டன் ஆயுதங்கள் அனுப்பியுள்ள அமெரிக்கா!

இஸ்ரேலுக்கு இதுவரை 50,000 டன் ஆயுத உதவி செய்துள்ள அமெரிக்கா…
நவ நாகரீக ஜனநாயக நாடாக காட்டிக் கொண்டு இரட்டை வேடம்…
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை இல்லை, ஈரானில் ஹிஜாப் அணியச் சொல்லி பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் உள்ளிட்ட பல பசப்பு அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடும் நாடு அமெரிக்கா. இதன் மூலம் பெண்ணுரிமை போராளி போல் தன்னைக் காட்டிக் கொள்ளும்.
ஆனால் காசாவில் கடந்த 10 மாதங்களில் கொல்லப்பட்ட சுமார் 50 ஆயிரம் பேரில், சுமார் 35 ஆயிரம் பேர், குழந்தைகள், பெண்கள். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர், உடல் உறுப்புகளை இழந்து படுகாயம் அடைந்துள்ளனர். இந்த இனப்படுகொலைக்கு ஆயுத உதவி, வெளியுறவு உதவி, மருத்துவ உதவி என பல உதவிகளை அமெரிக்கா செய்து வருவதை, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஊடகங்களின் செய்தியே அம்பலப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 10 மாதங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு செய்த உதவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அமெரிக்கா சுமார் 50 ஆயிரம் டன், அதாவது, 5 கோடி கிலோ எடையிலான, ஆயுதங்கள், போர் உபகரணங்கள் உள்ளிட்ட இனப்படுகொலைக்கு தேவையானவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த ஆயுதங்கள் 500 விமானங்கள், 107 கப்பல்கள்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
போரில் கடும் பின்னடைவுகளை சந்தித்து வரும் இஸ்ரேலுக்கு, இந்த ஆயுதங்கள் தான் ஊக்க மருந்தாக இருந்து வருகின்றன.
இஸ்ரேலின் முக்கிய ஆயுதமான மெர்க்காவா டாங்கிகளை குறிவைத்து ஹமாஸ் அழித்து வருகிறது. இஸ்ரேலிடம் 400 மெர்க்காவா டாங்கிகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் 160 டாங்கிகளை ஹமாஸ் இதுவரை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ள மெர்க்காவா டாங்கிகளை அழிப்பதற்காகவே, அல் யாசின் 105 என்ற பிரத்யேக எரிகணையை ஹமாஸ் உள்நாட்டிலேயே உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
================