பணக்கார நாடாக மாறும் ஆப்கானிஸ்தான்! தோண்ட தோண்ட தங்கம், மரகதம் மாணிக்கம்…

மலைகளில் புதைந்து கிடக்கும் கனிமவளங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்று பொருளாதாரத்தை பெருக்க தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாறை நிலப்பரப்புகளில் மரகதங்கள், தங்கம், மாணிக்கம், லித்தியம் என விலை மதிப்புமிக்க சுமார் ஒரு டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கனிம வளங்கள் புதைந்து கிடைப்பதாக 2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பின்வாங்கினர். இதனால் உட்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் என அனைத்து இடங்களிலும் ஆப்கானிஸ்தான் அடிவாங்கியது.
இந்நிலையில் தான் தன்னிடம் உள்ள கனிம வளங்களை ஏலம் விடுவதன் மூலம் வருவாய் ஈட்ட தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 200 ஒப்பந்தங்களில் இதுவரை கையெழுத்திட்டுள்ளார்களாம்.
பெரும்பாலான நாடுகள் தயங்கினாலும், காபூலுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணும் ஈரான், துருக்கி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கத்தார் போன்ற சில நாடுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. குறிப்பாக சீனா முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் தாமிரம் எடுப்பதற்கான 3 பெரிய சுரங்க ஒப்பந்தங்களை சீன நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் அதிக அளவிலான சுரங்கள் அமைக்கப்படுவதாகவும், அங்கு பிரித்தெடுக்கப்படும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாததால் மிகப்பெரிய மாசு ஏற்படக்கூடும் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால் ஆப்கானிஸ்தானில் நீர் மற்றும் நிலம் மாசடையக்கூடும் என்றும், அதனை சரி செய்யாவிட்டால் பேரழிவைச் சந்திக்ககூடும் என அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.