ஆதார் இருந்தாலும் இனி குடியுரிமை கிடையாது- இனி இரு ஆவணங்கள் மட்டுமே செல்லும்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான சான்றாகக் கருதுகிறது, ஆனால் குடியுரிமைக்கான சான்றாகக் கருதுவதில்லை

ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகள் குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் இல்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக, பிறப்பு மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் மட்டுமே இறுதி ஆதாரங்களாக கருதப்படும் எனக்குறிப்பட்டுள்ளனர்.
ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்ற ஆவணங்கள் நிர்வாக மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவை எதுவும் இந்திய குடியுரிமைக்கான சான்றாக இருக்காது. குடியுரிமைக்காக அரசாங்கம் அங்கீகரிக்கும் ஒரே ஆவணங்கள் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் என்பதை அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பல சட்டவிரோத வெளிநாட்டினர் ஆவண சரிபார்ப்பின்போது ஆதார், ரேஷன் அல்லது பான் கார்டுகளை கொண்டு தங்கள் குடியுரிமையை உறுதிசெய்து கொள்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற பல அடையாளச் சான்று ஆவணங்கள் உள்ளன. இருப்பினும், ஒருவரின் குடியுரிமையைச் சரிபார்க்க இந்த ஆவணங்களை பயன்படுத்த முடியாது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டையை அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான சான்றாகக் கருதுகிறது, ஆனால் குடியுரிமைக்கான சான்றாகக் கருதுவதில்லை. பான் மற்றும் ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும். பான் கார்டுகள் வரி நோக்கங்களுக்காக பயன்படுகின்றன. மேலும் ரேஷன் கார்டுகள் உணவு விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் குடியுரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசு ‘பிறப்புச் சான்றிதழ்கள்’ மற்றும் ‘குடியிருப்புச் சான்றிதழ்கள்’ ஆகியவற்றை மட்டுமே இந்திய குடியுரிமையைக் குறிக்கும் அடிப்படை ஆவணங்களாகக் கருதுகிறது.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றளிக்கும் சட்டம், 1969,ன் கீழ் பிறப்புச் சான்றிதழ்கள் குறிப்பிட்ட துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் வசித்து வருவதை வசிப்பிடச் சான்றிதழ்கள் உறுதிப்படுத்துகின்றன.