உலகம்

சுமார் ரூ. 84 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு!

செங்கடல் வழியாகத்தான் உலகத்தின் 30 சதவீத கடல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்ரிக்க நாடுகள், ஐரோப்பாவை சென்றடைவதற்கான குறுகிய வழியாக செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கடல் வழித் தடத்தின் பாதுகாப்பை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தங்களது கட்டுப்பாட்டில் இவ்வளவு ஆண்டுகளாக வைத்திருந்தனர். இந்நிலையில் ஏமனை ஆண்டு வந்த, சவுதி, அமெரிக்க ஆதரவு சன்னிப்பிரிவு ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்தது. அங்கு பெரும்பான்மையாக வாழும் ஷியா பிரிவு ஹவுத்தி பழங்குடியினர், அன்சர் அல்லா என்ற போராளிக்குழுவின் பக்கம் இணைந்தனர்.ஈரான் ஆதரவு பெற்ற இந்த போராளிக்குழு, அமெரிக்க ஆதரவு சன்னிபிரிவு ஆட்சியாளர்களுடன் பல ஆண்டுகளாக போரிட்டு, அவர்களை விரட்டியடித்து, ஏமன் தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பகுதிகளை கைப்பற்றியது. இதற்குபிறகு, அமெரிக்கா, பிரிட்டனின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் சுதந்திரமாக செயல்படத் தொடங்கினர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதையடுத்து, அதற்கு கண்டனம் தெரிவித்த அன்சார் அல்லா இயக்கம், பாலஸ்தீனத்தை காப்பது, இஸ்லாமியர்களின் மதக்கடமை என அறிவித்து, இஸ்ரேல் மீது போர் அறிவிப்பை வெளியிட்டது.செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என அறிவித்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கப்பல்கள் தாக்கப்பட்டன. இதில் 2 கப்பல்கள் முழுவதுமாக கடலில் மூழ்கியுள்ளன. 3வதாக சோயூனின் என்ற கப்பல் தீப்பிடித்து முழுவதுமாக அழிந்து, கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. இஸ்ரேல் தொழில் அதிபருக்கு சொந்தமான கேலக்ஸி லீடர் என்ற கப்பலை முழுமையாக கைப்பற்றி வைத்துள்ளனர்.இந்நிலையில், ஏமன் படைகள் மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து பல்வேறு அதிரடி தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இந்தத் தாக்குதல்கள் எந்த பலனையும் தரவில்லை. பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதையை மாற்றி, ஆப்ரிக்கா பக்கம் செல்லத் தொடங்கின.

இருப்பினும் சில நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கொடுக்கும் பாதுகாப்பை நம்பி, செங்கடல் வழியாக சென்று வருகின்றன. அப்படி செல்லும் கப்பல்களை தொடர்பு கொள்ளும் ஹவுத்திப் படைகள், அந்த கப்பல்கள், இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்கின்றதா, என்ன பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளன, எந்த துறைமுகங்களுக்கு கப்பல் செல்கிறது என விசாரிக்கின்றனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் பிற நாடுகளின் கப்பல்களை தாக்குவதில்லை.
அதே நேரம் ஒத்துழைப்பு அளிக்காத கப்பல்கள், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். சனிக்கிழமையும் ஒரு கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஊடகமான டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், ஹவுத்தி நடவடிக்கைகளால், இதுவரை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 84 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இஸ்ரேலின் பல துறைமுகங்கள் இதனால் முடங்கியுள்ளன.

விலைவாசி உயர்ந்துள்ளது. இஸ்ரேலின் கடன் உயர்ந்துள்ளது. கிரெடிட் ஸ்கோர் குறைந்துள்ளது. இருப்பினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் தொடர்ந்து தங்களுக்கு வெற்றி கிடைத்து வருவதாக, இஸ்ரேல் உலக அரங்கில் பிரச்சாரம் செய்து வருகிறது.
சுமார் 50 ஆயிரம் காசா மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை தவிர்த்து, காசா நிலப்பகுதி அழிக்கப்பட்டதை தவிர்த்து, பெரிய எந்த சாதனையையும் இஸ்ரேல் செய்யவில்லை. இதன் மூலம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான பகையை நெதன்யாகு சம்பாதித்து கொடுத்துள்ளார் என்பதே உண்மை…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button