அநியாயமாக பிரிந்த உயிர்!

உ.பி. மருத்துவமனையில் பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர், மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த நிகழ்வு நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.15 நிமிடமாக தொடர்ந்து, அந்த பெண்ணை கவனிக்காததால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்டு பெண்ணின் மகனை மருத்துவர் தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.மணிப்பூரி மாவட்ட மருத்துவமனையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குரு சரண் சிங் என்ற இளைஞர் தனது 60 வயது தாயாரான பிரவேஷ் குமாரி என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், செவிலியர்களும், கம்பவுன்டர்களும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.மாரடைப்பால் உயிருக்கு போராடிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை. அவரது உடல் குளிர்ந்து கொண்டே சென்றதால், மகன்கள் கால்களை தேய்த்து சூடேற்றியுள்ளனர். இப்படியே 15 நிமிடம் கடந்த நிலையில், அந்த மூதாட்டியின் வாயில் இருந்து, ரத்தம் கசிந்துள்ளது.இதனையடுத்து அவரது மகன்கள் பிரச்னை எழுப்ப, அங்கு வந்த மருத்துவர், அவர்களை தாக்கியுள்ளார். பிறகு அந்த மூதாட்டியை பரிசோதித்த போது, அவர் உயிர் பிரிந்தது தெரியவந்துள்ளது.இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியாகியுள்ளன.