கர்நாடக பாஜகவில் பிளவு – சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் மாநிலத் தலைவர்!

கர்நாடகா பாஜகவில் பிளவு…
சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா…
எடியூரப்பாவின் மகனை எதிர்த்து, தனது மகனை களமிறங்கி சவால்…
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறி வந்த நிலையில், தற்போது, நிலைமை மாறியுள்ளது.
அங்கு கடும் போட்டி நிலவி வரும் சூழலில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமாக இருந்த ஈஸ்வரப்பா, தற்போது, சுயேட்சையாக தேர்தலை சந்திக்க களமிறங்கியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தனது மகன் கந்தேசுக்கு ஈஸ்வரப்பா சீட் கேட்டிருந்தார்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கிறோம் என பாஜக தலைமை கூறியுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவர் காத்திருந்த நிலையில், அவர் கேட்டிருந்த ஹவேரி தொகுதியை ஒதுக்காமல், அந்த தொகுதியை முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு பாஜக தலைமை ஒதுக்கியுள்ளது.
இதற்கு பின்னணியில் எடியூரப்பா இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஈஸ்வரப்பா, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிடும், சிவமொக்கா தொகுதியில் அவரை எதிர்த்து தனது மகன் கந்தேசை களமிறங்கியுள்ளார்.
அமித்ஷா உள்ளிட்டவர்களின் சமாதானத்தையும் ஏற்க ஈஸ்வரப்பா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கூறியுள்ள ஈஸ்வரப்பா, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மோடி ஜி பிரச்சாரம் செய்கிறார், ஆனால் அதே போலத் தான் கர்நாடகாவில் எடியூரப்பா குடும்ப கட்டுப்பாட்டில் பாஜக இருக்கிறது.
இந்துத்துவ கொள்கைக்காக உழைத்த, சி.டி. ரவி, பிரதாப் சிம்ஹா, பசன கவுடா பாட்டீல், சதானந்த கவுடா ஆகியோர் ஓரம்கட்டப்பட்டுள்ளனர். என ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொப்பல் தொகுதியில் பாஜக சார்பில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கரடி சங்கன்னா என்பவர், தனக்கு எம்.பி. சீட் மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
தும்கூர் தொகுதியில் வி. சோமன்னா என்பவர் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டதற்கு, பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜே.சி. மதுசாமி வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகக் போவதாகவும், பாஜக வேட்பாளருக்கு வேலை செய்யப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
கர்நாடக பாஜக முக்கியத் தலைவர்களான சி.டி. ரவி, சதானந்த கவுடா உள்ளிட்டவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளதால், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கடும் சவாலாக அமைந்துள்ளதாக தேசிய ஊடகங்கள் கணித்துள்ளன.
======================