இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அட்டூழியம் – 27 பாலஸ்தீனியர்கள் பலி…!

இஸ்ரேலின் பாலஸ்தீனத்தின் மீதான தனது கொடூர தாக்குதல்கள் தற்போது 8 மாதத்தைக் கடந்து 9ம் மாதத்திற்குள் நுழைந்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை இன்று அதிகாலை காசா முழுவதும் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய காசாவில் உள்ள வாடி காசா பகுதிக்கு தெற்கே உள்ள சலா அல்தின் தெருவில் உணவு மற்றும் உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படை தாக்குதல் நடத்தியதில், 8 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
தென்மேற்கு காசா நகரத்தின் நெட்சாரிம் பாதையில் உதவிக்காக காத்திருந்த அப்பாவி பாலஸ்தீனியர்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை, அதிலும் திருப்தி அடையாமல் இறந்த இளைஞர்களின் உடல்களை அங்கிருந்த கிணற்றுக்குள் தூக்கி வீசும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பாலஸ்தீனிய ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.
தெற்கு அல்-நுசைராத் அகதிகள் முகாமின் வடக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் ஆறு பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர். டெய்ர் அல்-பலாவில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே, கிழக்கு காசாவில் இருந்து கிழக்கு அல்-சாய்டவுனுக்கு இடம் பெயர்ந்தவர்கள் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
வடக்கு காசாவில், ஜபாலியாவில் இரண்டு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.