திவால் நிலையை நோக்கி இஸ்ரேல்? ரூ.1 லட்சம் கோடி அவசர தேவை!
ஈரான் உடனான போர் நீடித்தால், இஸ்ரேல் திவாலாகி விடும் என செய்திகள் வெளியாகியுள்ளன

ஈரானுடனான இராணுவ மோதலின் விளைவாக “இஸ்ரேல்” பெருகிவரும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளது. போரின் செலவு இஸ்ரேலிய பொருளாதாரத்தை ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் குறைத்து வருகிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
இந்த அதிர்ச்சியூட்டும் செலவுகள் “இஸ்ரேலின்” நீண்டகால தாக்குதலைத் தாங்கும் திறன் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
ஈரான் ஏவுகணைகளை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு அதிக செலவினங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதற்காக ஒரு நாளைக்கு இஸ்ரேல் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 1731 கோடி ரூபாய்.
போர் ஒரு வாரத்திற்குள் முடிந்து விட்டால் பிரச்னை இல்லை, அது தொடர்ந்தால், வேறு மாதிரியான சவால்களை இஸ்ரேல் எதிர்கொள்ளும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த இஸ்ரேல் வங்கியின் முன்னாள் ஆளுநர் கர்னிட் ஃப்ளக் கூறியுள்ளார்.
டேவிட்’ஸ் ஸ்லிங் சிஸ்டத்தில் இருந்து ஒரு ஏவுகணையை இடைமறிக்க 7 லட்சம் அமெரிக்க டாலர் செலவாகும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6 கோடி ரூபாய் ஆகும். ஈரான் இதுவரை 400 ஏவுகணைகளை செலுத்தியுள்ளது.
ஆரோ 3, ஏவுதலுக்கு $4 மில்லியன் வரை செலவாகும். பழைய ஆரோ 2 இடைமறிப்பான்கள் கூட தோராயமாக $3 மில்லியன் செலவாகும்.
இதேப் போல் ஈரான் மீது தாக்குதல் நடத்த பெரும் தொகையை இஸ்ரேல் செலவு செய்கிறது. அதாவது ஒரு F35 விமானம் வானில் ஒரு மணி நேரம் பறப்பதற்கு மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் எரிபொருள் செலவு ஆகின்றது.
ஒரு மாதம் ஈரானுடன் போர் புரிய இஸ்ரேலுக்கு குறைந்த பட்சம் 12 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை கூறுகிறது. இந்திய மதிப்பில் 1 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இது போர் செலவினம் மட்டுமே. இவ்வளவு செலவு செய்தாலும் பிரச்னை தீர்ந்து விடாது. ஈரானின் எதிர்வினையால் பல துறைகள் ஏற்கனவே முடங்கியுள்ளன. முக்கிய விமான நிலையம் மூடப்பட்டது , வணிகங்கள் மூடப்பட்டன, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஏவுகணையால் சேதமடைந்த சுற்றுப்புறங்களிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வெளியேற்றப்பட்டு , தற்போது தற்காலிகமாக அரசு நிதியளிக்கும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் உள்ள “இஸ்ரேலின்” மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது இரண்டு தாக்குதல்கள் உட்பட, முக்கியமான உள்கட்டமைப்பை ஈரான் முடக்கியுள்ளது.
===