இனி குண்டு வீச முடியாது – ராணுவத்தில் இருந்து விலகிய இஸ்ரேல் கர்னல்!

காசாவில் குண்டு வீச முடியாது எனக் கூறி, இஸ்ரேலிய விமானப்படை கர்னல் ராணுவத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நிகழ்வு, ஆக்கிரமிப்பு நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, இஸ்ரேலின் ராணுவ வானொலியான கன் ரேடியோவில் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ விமானப்படை கர்னல் ஒருவர், தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது, ஒரு வேலையை எவ்வளவு கவனமாக செய்தாலும் அதில் 1 சதவீதம் தவறு நடந்து விடும். அது போலத்தான் 1000 இடங்களில் குண்டு வீசும் போது, 10 இடங்கள் தவறுதலாக அமைந்து விடுகின்றன.
அப்படி தவறுதலான இடங்களில் குண்டு வீசும் போது, அப்பாவிகள் கொல்லப்படுகின்றனர். சில நேரம் நமது வீரர்களையே கொல்கிறோம். நமது கைதிகளை கொல்வதற்கும் வாய்ப்புள்ளது. இதைத் தான் தொடர்ந்து செய்து வருகிறோம்.கைதிகளை காப்பாற்றுவதற்காகத் தான் இந்த போர் என்று நினைத்து, இதில் பங்கேற்றேன். ஆனால் இத்தனை நாட்கள் குண்டு வீசியும், சண்டையிட்டும் கைதிகளை மீட்க முடியவில்லை. எனவே இனி சண்டையிடுவது வீண். அரசியல் ரீதியாக பேசித் தான் கைதிகளை மீட்க முடியும்.
எனவே ராணுவ வான் படையில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். ஓய்வில் இருந்த என்னை மீண்டும் பணியில் சேரச் சொல்லி உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால் மீண்டும் பணிக்கு வர முடியாது என கடிதம் அனுப்பி விட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மட்டுமின்றி, ரிசர்வ் ராணுவப் பணியில் இருந்த பலர் மீண்டும் ராணுவ பணிக்கு திரும்ப முடியாது என கூறி வருவதால், ஆக்கிரமிப்பு நிர்வாகம் மன நெருக்கடியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.