அமெரிக்க கைதி விடுதலை – ஹமாசுக்கு டிரம்ப் பாராட்டு!

நீண்ட கால அமெரிக்க கைதியான ஈடன் அலெக்சாண்டரை விடுவிக்கும் ஹமாசின் அறிவிப்பிற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது ஒரு ஒட்டுமொத்த போரையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான நல்லெண்ண நடவடிக்கை என புகழ்ந்துள்ளார்.
இந்த முடிவை ஹமாஸ் எடுத்துள்ளதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோன் எனத் தெரிவித்துள்ளார். இந்த ரத்தவெறி பிடித்த பிரச்னைகளை இந்த நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரும் என குறிப்பிட்டுள்ளார்.
ஹமாசின் அக்டோபர் 7 நடவடிக்கையின் போது, அமெரிக்க, இஸ்ரேலிய குடிமகனான அலெக்சாண்டர், ஹமாஸ் படையால் காசாவுக்கு பிடித்துச் செல்லப்பட்டார். அவருக்கு வயது 21. இவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கோலானி படைப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
கைதிகள் விடுதலை தொடர்பாக, இஸ்ரேல் – ஹமாஸ் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அமெரிக்கா, நேரடியாக ஹமாஸ் உடன் பேசி, அலெக்சாண்டரை விடுவிக்க எடுத்துள்ள முயற்சி, நெதன்யாகு நிர்வாகம் மீது, இஸ்ரேலியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்சாண்டர் இன்னும் 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவார் என கூறியுள்ள அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப், இந்த பேச்சுவார்த்தை குறித்து, இஸ்ரேலிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும், கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கிற்கு சுற்றுப் பயணம் செய்யும் நிலையில், நல்லெண்ண நடவடிக்கையாக அலெக்சாண்டர் விடுவிக்கப்படுவார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி, காசாவின் சிவில் நிர்வாகத்தை சீரமைக்க ஹமாஸ் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அலெக்சாண்டர் விடுவிக்கப்பட்டால், அது நெதன்யாகுவின் அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவர் யாயிர் லாபித் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விடுதலை என்பது மகிழ்ச்சிகரமான ஒன்று. இத்துடன் இந்த நடவடிக்கை நின்று விடக் கூடாது. அனைத்து கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை பார்க்கும் போது, இதயம் வலிக்கிறது. அமெரிக்காவால் செய்ய முடிந்த ஒன்றை, நெதன்யாகுவால் செய்ய முடியவில்லை. எனவே இஸ்ரேலின் மற்றொரு எதிர்கட்சித் தலைவரான பென்னி கட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சியுள்ள 59 இஸ்ரேலிய கைதிகளையும் மீட்கும் பொறுப்பு இஸ்ரேல் அரசுக்கு உள்ளது என அவர்கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹமாசிடம் இருந்து விடுதலையான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர் சிலி டிராப்பர் என்பவர், ரணுவ உடையில் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது விடுதலையில் வெளிநாடுகள் தான் உதவின. எனதுசொந்த நாடு உதவவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
ஓஹத் தால் என்ற இரட்டை இஸ்ரேலிய குடியுரிமை பெற்ற ஆக்கிரமிப்பு வீரர் ஒருவர் கூறும் போது, வெளிநாட்டு பாஸ்போர்ட் தான், எனது உயிரை காப்பாற்றியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அண்மை அரசியல் நகர்வுகள் குறித்து, கருத்து தெரிவித்துள்ள, இஸ்ரேலிய கைதிகளின் குடும்பத்தினர், இஸ்ரேல் அரசிடம் கோரிக்கை வைத்து, இனி எந்த பலனும் இல்லை, இனி, டொனால்டு டிரம்பிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
======