சிரியாவில் காணாமல் போன ராணுவ வீரர் – 43 ஆண்டுகளுக்கு பிறகு போராடி உடலை மீட்ட இஸ்ரேல்!

43 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இஸ்ரேல் ராணுவ வீரரின் உடல் சிரியாவின் மையப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் மொசாட் உளவுத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் அந்த உடல் இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
“IDF மற்றும் மொசாட் தலைமையிலான ஒரு சிறப்பு நடவடிக்கையில், இஸ்ரேல் ராணுவ வீரர் ஃபெல்ட்மேனின் உடல் சிரியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு சுல்தான் யாகூப் போரில் ஃபெல்ட்மேன் மற்ற இரண்டு வீரர்களுடன் காணாமல் போனார், சுல்தான் யாகூப் போரானது சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள கிழக்கு லெபனானின் பெக்கா பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே நடந்த போராகும்.
43 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் ஃபெல்ட்மேனின் உடலைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
மேலும் பெல்ட்மேனையும் அவரது தோழர்களான ஜக்காரியா பாமெல் மற்றும் யெஹுதா காட்ஸ் ஆகியோரையும் தேடும் பணி பல தசாப்தங்களாக நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். இன்று நாங்கள் ஃபெல்ட்மேன் உடலை கொண்டுவந்துள்ளோம். அதே போரில் தொலைந்து போன யெஹுதா காட்ஸை திருப்பி கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் நிறுத்த மாட்டோம்,” என நெதன்யாகுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ அறிக்கையில், ஃபெல்ட்மேனின் உடல் இராணுவ வீரர்களுக்கான மரபணு அடையாள மையத்தால் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது, சார்ஜென்ட் ஃபெல்ட்மேனின் உடலை இஸ்ரேலுக்கு கொண்டு வரும் முயற்சியானது ஒரு சிக்கலான மற்றும் இரகசிய நடவடிக்கை மற்றும் துல்லியமான உளவுத்துறை மூலம் சாத்தியமானது.
” மொசாட் மற்றும் IDF புலனாய்வு உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு பிரிவுகள், ஷின் பெட் மற்றும் IDF மனிதவள இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு விரிவான உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு முயற்சியின் வெற்றி இதுவாகும்,” என இராணுவம் தெரிவித்துள்ளது.
====