போர் வந்தால் இந்தியாவின் 7 மாநிலங்களை பிடிப்போம் – வங்கதேசத்தின் பலே ஐடியா
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரி இந்தியாவுக்கு தப்பிச் சென்றதும், நாட்டில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த இந்தியாவின் கண்டனங்களும் புது தில்லி மற்றும் டாக்கா இடையே கருத்துவேறுபாடுகளை உருவாக்கியிருந்தது

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், தனது நாடு இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் ஆக்கிரமிக்க வேண்டும் என ஓய்வுபெற்ற வங்கதேச மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக, சீனாவுடன் கூட்டு இராணுவ ஏற்பாடு குறித்த விவாதங்களைத் தொடங்குவது அவசியம் என தான் கருதுவதாக தேசிய சுதந்திர ஆணையத்தின் தலைவர் ரஹ்மான் ஃபேஸ்புக்கில் வங்காள மொழியில் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரி இந்தியாவுக்கு தப்பிச் சென்றதும், நாட்டில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்த இந்தியாவின் கண்டனங்களும் புது தில்லி மற்றும் டாக்கா இடையே கருத்துவேறுபாடுகளை உருவாக்கியிருந்தது.இவ்விவகாரங்களை ஒதுக்கி வைத்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் ரஹ்மானின் கருத்துக்கள் வந்துள்ளன.
வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஃபஸ்லுர் ரஹ்மான், தனது யோசனையை அடைய சீனாவுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
மார்ச் மாதம் சீனாவிற்கு வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ் சென்றிருந்த போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து தெரிவித்த கருத்துகளும் பெரும் சர்ச்சையை கிளப்பிருந்தது.
சீனாவில் அவர் பேசும் போது “இந்தியாவின் கிழக்குப் பகுதியான ஏழு மாநிலங்கள் “ஏழு சகோதரிகள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை இந்தியாவின் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. கடலை அடைய அவர்களுக்கு எந்த வழியும் இல்லை, வங்காளதேசமே இப்பகுதியில் “கடலின் ஒரே பாதுகாவலர்” என்று அவர் கூறியிருந்தார்,
இந்தக் கருத்தை இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவின் பல தலைவர்கள் கண்டித்திருந்தனர். ஏப்ரல் மாதம் பிம்ஸ்டெக்கின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போது இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறிய கருத்து, யூனுஸின் கருத்துக்கு பதிலடியாக அமைந்தது. நமது வடகிழக்கு பிராந்தியம், எண்ணற்ற சாலைகள், ரயில்வேக்கள், நீர்வழிகள், கட்டங்கள் மற்றும் குழாய் இணைப்புகளைக் கொண்ட பிம்ஸ்டெக்கின் இணைப்பு மையமாக வளர்ந்து வருகிறது,” என்று அவர் கூறியிருந்தார்.
யூனுஸின் கருத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு, சரக்கு போக்குவரத்தில் அதிகரித்து வரும் நெரிசலைக் காரணம் காட்டி, பங்களாதேஷ் ஏற்றுமதி சரக்குகளை இந்திய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக மூன்றாம் நாடுகளுக்கு மாற்றுவதற்கான கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால ஏற்பாட்டை இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.