வெட்டி சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி – மங்களூருவில் பரபரப்பு
இந்துத்துவ ஆதரவாளரான சுகாஸ் ஷெட்டி பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஆவார்

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிரபல ரவுடியும் இந்துத்துவ ஆதரவாளருமான சுகாஸ் ஷெட்டி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் மங்களூர் முழுவதும் மே 6ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பிரபல ரவுடியாக அறியப்படுபவர் சுகாஷ் ஷெட்டி.2022 ஆம் ஆண்டு நடந்த பாசில் கொலை வழக்கு உள்ளிட்ட 5 குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன.பாசில் கொலை சம்பவம் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் பதற்றத்தை உண்டாக்கியது குறிப்படத்தக்கது.
சுகாஸ் ஷெட்டி வியாழன் இரவு தனது சக நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது இடைமறித்த 6 பேர்கொண்ட கும்பல் ஆயுதங்களால் சரமாரியாக சுகாஸை தாக்கியது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுகாஸ் ஷெட்டி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கடுமையான காயங்கள் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
தகவல் அறிந்த பாஜக எம்எல்ஏக்கள் பாரத் ஷெட்டி, வேதவியாஸ் காமத்,ஹரிஸ் பூஞ்சா உள்ளிட்டோரும் இந்துத்துவ அமைப்பினரும் மருத்துவமனை விரைந்தனர்.இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா பாஜக தலைவர்கள் கர்நாடகாவில் இந்து ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் காங்கிரஸ் அரசு இந்து ஆதரவாளர்களை பாதுகாப்பதில்லை எனவும் விமர்சனத்தை வைத்துள்ளனர்.
கர்நாடகா RSS தலைவர் கல்லடா பிரபாகர் கூறுகையில் “இந்து சமூகம் இந்துத்துவவாதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்” எனவும் அழைப்பு விடுத்தார்.
இக்கொலை சம்பவத்தை அடுத்து வெள்ளி அன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.