மீண்டும் மொழி சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு – பற்றி எரியும் விவாதம்…!

கர்நாடாகாவிற்கு மொழி பிரச்சனை என்பது புதிதல்ல. தமிழர்களைப் போலவே கன்னடர்களும் தங்களது தாய்மொழியான கன்னடத்திற்கு மிகுந்த மதிப்பளிப்பார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தி பேசும் நபர்களுக்கு கட்டணத்தை அதிகமாக கூறியதும், அவர்கள் அழைக்கும் இடத்திற்கு வர முடியாது என சவாரியை கேன்சல் செய்ததும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதேபோல் பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்தி தெரியவில்லை, ஆங்கிலத்தில் பேசுவதும் கடினமாக உள்ளது என வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர்கள் புகார் தெரிவித்தும் வருகின்றனர்.
சமீபத்தில் பெங்களூரு வித்யாரண்யபுராவில் உள்ள ஓர் உள்ளூர் உணவகத்தின் அறிவிப்புப் பலகை ஒன்று மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. வித்யாரண்யபுராவில் ஸ்ரீ குரு தர்ஷன் கஃபே என்ற உள்ளூர் உணவகத்தின் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் ’இந்தி அதிகாரப்பூர்வ மொழி’ என்று எழுதப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்படி மொழி சார்ந்த பிரச்சனைகளை தொடர்ந்து கிளப்புவதால் பெங்களூரு பலருக்கும் பிடிக்காத இடமாக மாறி வருகிறது என நெட்டிசன்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் மற்றொரு தரப்போ, எங்கள் ஊரைப் பற்றி தவறாக பேசாதீர்கள். இதை செய்தது யார், எதற்காக செய்தார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொண்டு கமெண்ட் செய்யுங்கள் என கன்னட நெட்டிசன்கள் கடுப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்னவென்றால், பெங்களூருவில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வித்யாரண்யபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த காவல்துறை, அந்தப் பலகை பாபு என்ற நபரால் வைக்கப்பட்டது என்றும், கட்டடத்தின் உரிமையாளருக்கு அது தெரியாது என்றும் உறுதிப்படுத்தினர். தற்போது அந்த பலகை அகற்றப்பட்டாலும், சோசியல் மீடியா விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.