யார் இந்த பலூச் விடுதலை ராணுவம் – ஏன் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டை செய்கிறார்கள்?

பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பலூச் கிளர்ச்சித் தலைவர்களை விடுவிக்கக் கோரி, பலூச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படை ராணுவத்தினர் சென்ற ரயிலை கடத்தி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.யார் இந்த பலூச் விடுதலைப் படை, இவர்களது கொள்கை, நோக்கம் என்ன? பாகிஸ்தானுக்கு எதிராக இவர்கள் ஏன் போரிடுகிறார்கள் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதி பலுசிஸ்தான். தங்கம், காப்பர் உள்ளிட்ட பண மழை பொழியச் செய்யும் பல கனிம வளங்களை கொண்ட பகுதி. இங்குள்ள கனிம வளங்களை அள்ளிச் சென்று, கஜானாவை நிரப்பி வருகிறது பாகிஸ்தான் அரசு. ஆனால், அப்பகுதி பலுசிஸ்தான் பழங்குடிகள் தொடர்ந்து ஏழையிலும் ஏழையாக, கல்வி அறிவு அற்றவர்களாக இருந்து வருகின்றனர்.எனவே அந்தப் பகுதி கனிம வளங்கள் தங்களுக்கே சொந்தம், அதனை பாகிஸ்தான் எடுக்கக் கூடாது, மேலும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்களது வளம் திருடப்படுவதாக பலுசிஸ்தான் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் நிரந்தர தீர்வு வேண்டும் என்றால், தங்களது பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். இது அப்பகுதி மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றதால், பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. இந்த குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான், இந்தியா நாடுகள் ஆயுதம் மற்றும் பணம், உளவு உதவிகளை வழங்குவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.சீனாவுடன் பாகிஸ்தான் போட்டுள்ள சுமார் 5.6 லட்சம் கோடி ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதே நேரம் எதிர்குரல் எழுப்புபவர்களையும், தனி நாடு கேட்பவர்களையும், மூட்டை பூச்சிகளை போல நசுக்கி, மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து வருவதாக பாகிஸ்தான் மீது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.குறிப்பாக எண்ணற்ற பலூச் கிளர்ச்சித் தலைவர்கள், பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தச் சூழலில் தான், சிறுசிறு குழுக்களாக செயல்பட்டு வந்த பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படைகள், ஒரே அமைப்பாக அண்மையில் இணைந்தன.
தொடர்ந்து, தற்போது, ராணுவத்தினர் சென்ற ரயிலை கைப்பற்றி, 48 மணி நேரத்திற்குள் தங்களது தலைவர்களை விடுவிக்காவிட்டால், கைதிகள் அனைவரையும் கொன்று விடுவோம் என பலூச் அமைப்பினர் மிரட்டியுள்ளனர்.
தற்போது வரை 150 பேரை மீட்டுள்ளதாகவும், கிளர்ச்சிப்படையினர் 27 பேரை கொன்றுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. எனினும், 30 ராணுவத்தினர், பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்களது பிடியில் உள்ளதாக பலூச் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறையில் வாடிய பாலஸ்தீன தலைவர்களை மீட்பதற்காக என்று கூறி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதை போல, பலூச் தலைவர்களை மீட்க, அந்நாட்டு கிளர்ச்சிப்படைகள், இப்படி ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.