தேஜஸ்வியின் அதிரடி கருத்து – நடுக்கத்தில் பாஜக!

ஹோலிப் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத், அவரது காவல்துறை, பாஜக தலைவர்கள் என பலரும் கூறி வரும் கருத்திற்கு, கடும் பதிலடியை கொடுத்தார் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ்.
இதுகுறித்து அவர் கூறும் போது, இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்ற பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உன் அப்பன் ஆட்சி இங்கு நடக்கவில்லை. இது பீகார். ஆர்எஸ்.எஸ். பாஜகவின் டிசைன் இங்கு பெரும்பாலும் முறியடிக்கப்பட்டே வருகிறது, இஸ்லாமியச் சகோதர்களை அச்சத்தில் ஆழ்த்தலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர், இங்கு ஒரு இஸ்லாமியரை தொட்டால், அவரை பாதுகாக்க 6 இந்துக்கள் வருவார்கள். நிதிஷ்குமார் உடனடியாக பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் சுய நினைவுடன் இருப்பதாக தெரியவில்லை.
அரசியலமைப்பு சாசனத்தை கேலிக்கூத்தாக்க நினைக்கின்றனர். உங்களது எல்லையை தெரிந்து கொண்டு, அதற்குள் நின்று விளையாடுங்கள், இது லாலுவின் மண். அதுவரை இங்கு கலவரங்கள் நடக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அது எங்களுக்கு ஆட்சியை கொடுத்தாலும் சரி. அல்லது ஆட்சியை பறித்தாலும் சரி. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.இந்நிலையில் இதற்கு பதில் அளித்து, பாஜக மக்களவை கொறாடா மற்றும் பீகார் எம்.பியான சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறும் போது, ஹோலிப் பண்டிகையின் போது, வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்களை வலியுறுத்தியது தவறு, நாங்கள் ஈத் பண்டிகையின் போது, இஸ்லாமியர்களின் வீடுகளுக்குச் செல்வோம், அது போல ஹோலி அன்பை வலியுறுத்தும் பண்டிகை, அதே நேரம் இந்த நாடு உன் அப்பன் வீட்டு சொத்து அல்ல என தேஜஸ்வி யாதவ் கூறியதும் தவறு, அவர் பிடிவாதக்காரராக இருக்கிறார் என சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.