ஒரு முஸ்லீமுக்கு ஆபத்து என்றால், 6 இந்துக்கள் பாதுகாக்க வருவார்கள்! தேஜஸ்வி யாதவ் பரபரப்பு பேச்சு!

ஹோலிப் பண்டிகையின் போது, இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிற்குள் இருந்து கொள்ள வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில், இது ஒன்றும் உன் அப்பன் வீட்டு நாடு அல்ல என பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.உத்திரப்பிரதேச மாநிலம் சம்பாலில் தான் இந்தப் பிரச்னை தொடங்கியது. ஏற்கனவே அங்குள்ள 800 ஆண்டுகள் பழமையான சம்பால் பள்ளிவாசல், முன்பு கோவிலாக இருந்ததாக கூறி, அங்கு ஆய்வுக்கு அரசு அதிகாரிகள் சென்ற நிலையில் கலவரம் வெடித்து 4 இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது, வெள்ளிக்கிழமை அன்று ஹோலி கொண்டாடப்படும் நிலையில், அன்றை தொழுகை நேரத்தை மாற்ற வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் முஸ்லீம்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என கூறி வருகிறது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்தும் இதே கருத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து, பீகார் பாஜக எம்எல்ஏ ஒருவரும், இன்னும் பிற பாஜக தலைவர்களும் இதே கருத்தை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு கடும் பதிலடியை கொடுத்துள்ளார் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்ற பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். உன் அப்பன் ஆட்சி இங்கு நடக்கவில்லை. இது பீகார். ஆர்எஸ்.எஸ். பாஜகவின் டிசைன் இங்கு பெரும்பாலும் முறியடிக்கப்பட்டே வருகிறது, இஸ்லாமியச் சகோதர்களை அச்சத்தில் ஆழ்த்தலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர், இங்கு ஒரு இஸ்லாமியரை தொட்டால், அவரை பாதுகாக்க 6 இந்துக்கள் வருவார்கள். நிதிஷ்குமார் உடனடியாக பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் சுய நினைவுடன் இருப்பதாக தெரியவில்லை.அரசியலமைப்பு சாசனத்தை கேலிக்கூத்தாக்க நினைக்கின்றனர். உங்களது எல்லையை தெரிந்து கொண்டு, அதற்குள் நின்று விளையாடுங்கள், இது லாலுவின் மண். அதுவரை இங்கு கலவரங்கள் நடக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். அது எங்களுக்கு ஆட்சியை கொடுத்தாலும் சரி. அல்லது ஆட்சியை பறித்தாலும் சரி. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.