நடிகையை பரிசோதித்த அதிகாரிகள் – காத்திருந்த அதிர்ச்சி!

கர்நாடக காவல்துறை டிஜிபியின் மகளும், நடிகையுமான ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. அவரது தந்தை டிஜிபி என்பதால், விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை பயன்படுத்தி, அவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீசார் சோதித்த போது, இடுப்பில் அவர் அணிந்திருந்த பெல்டில், சுமார் 14 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 800 கிராம் தங்க நகைகளை அவர் அணிந்து வந்துள்ளார்.
டிஜிபியின் மகள் என்பதால், ஐ.பிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளான, வழித்தடங்கள், அரசு வாகனம் ஆகியவற்றை பயன்படுத்தி, அவர் தப்ப முயன்றுள்ளார்.
இதில் முக்கியமான விசயம், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 முறை வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். அவர் இதற்கு முன்பு சென்று வந்த தேதிகளை வைத்து, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, இதற்கு முன்பும், அதே போன்ற பெல்டுகளை அவர் அணிந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் அவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தனது மகளுக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனதாகவும், அதற்கு பிறகு, அவரை சந்திக்க வில்லை என அவரது தந்தையும் கர்நாடக டிஐஜியுமான ராமசந்திர ராவ் விளக்கம் அளித்துள்ளார். எனவே தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்டம் தன் கடமையை செய்யலாம் என கூறியுள்ளார்.
தமிழில் விக்ரம் பிரபு உடன் வாகா திரைப்படத்தில் நடித்தவர் ரன்யா ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.