திருச்செங்கோடு வங்கி அதிகாரிகள் மீதான மோசடி வழக்கு – மீண்டும் விசாரிக்க

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவபாண்டியன், திருச்செங்கோட்டில் ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வந்துள்ளார். தொழிலை விரிவுபடுத்துவதற்காக சிட்டி யூனியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அப்போது, அவரது கசோலையை வங்கி பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 தவணையாக சுமார் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியிடமும், மாவட்ட குற்றப்பிரிவிலும் புகார் செய்துள்ளார்.விசாரணை நடத்திய போலீசார், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி, பொது மேலாளர் மோகன், கிளை மேலாளர் குஞ்சித பாதம் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்தச் சம்பவங்கள் 2020ஆம் ஆண்டு நடைபெற்றன. ஆனால் 2021 ஆம் ஆண்டு வங்கி அதிகாரிகள் தொழிலதிபர் கேசவ பாண்டியன் மீது திருட்டு புகார் ஒன்றை கொடுத்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரில், தனது கையெழுத்தை போலியாக போட்டு, போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் அடிப்படையில் புகார் கொடுத்திருப்பதை பார்த்து, கேசவ பாண்டியன் அதிர்ச்சியடைந்துள்ளார்.இதுகுறித்து கேசவ பாண்டியன் அளித்த புகாரின் பேரில், சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் அரவிந்த், கும்பகோணத்தில் உள்ள வங்கியின் மேனேஜர் குஞ்சிதபாதம், கும்பகோணம் கிளையின் சீனியர் மேனேஜர் கணேசன், இன்ஸ்பெக்ஷன் பிரிவு சீனியர் மேனேஜர் மகாராஜா, மண்டல மேலாளர் சுயம்புலிங்க ராஜா மற்றும் திருச்செங்கோடு கிளை மேலாளர் ராமன் ஆகிய ஆறு பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக் கூறி, கேசவ பாண்டியனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் அவருக்கு சுமார் 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கேசவ பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்திருந்த நிலையில், தற்போது, அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வங்கித் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த பரபரப்பு விவகாரம் குறித்து, தொழில் அதிபர் கேசவ பாண்டியன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.