காசிமாவுக்கு ரூ. 1கோடி பரிசுத் தொகை! உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!

உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்ற குகேசுக்கு தமிழ்நாடு அரசு 5 கோடி பரிசுத் தொகை அறிவித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உலக கேரம் சாம்பியன் போட்டியில் 3 தங்கப் பதங்ககங்களை வென்ற சென்னை பெண் காசிமாகவுக்கு எந்த பரிசும் அறிவிக்கப்படாதது ஏன் என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழக அரசு சார்பில் காசிமா அமெரிக்கா செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
குகேஷுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊக்கத் தொகைகளை வழங்கிய நிலையில், போட்டியில் வென்ற பிறகு, 5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் காசிமா அமெரிக்கா செல்லவே 2.5 லட்சம் தேவைப்பட்ட நிலையில், தமிழக அரசு வெறும் 1.5 லட்சம் மட்டுமே வழங்கியது ஏன் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர்.குறிப்பாக தமிழ்தேசிய ஆர்வலர்கள், காசிமா தமிழ் முஸ்லீம் பெண் என்பதால் புறக்கணிப்பட்டாரா, குகேஷ் தெலுங்கு தாய்மொழி கொண்டவர் என்பதால் ஊக்குவிக்கப்பட்டாரா என கேள்விகளை முன்வைத்தனர்.இந்தச் சூழ்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 தங்க பதக்கங்களை வென்ற காசிமாவுக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கி கவுரவித்துள்ளார். காசிமாவுக்கு அடுத்த இடங்களில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு தலா 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.