உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தவர்; யார் இந்த அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ்?

உலகிலேயே முதன் முறையாக விமானத்தைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால்… ரைட் சகோதரர்கள் என்று சொல்வார்கள்… ஆனால் கிபி.800-களிலேயே விமானத்தை உருவாக்கியது மட்டுமின்றி அதில் பறந்தும் காண்பித்து வரலாறு படைத்தவர் ஒரு இஸ்லாமியர் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவருடைய பெயர் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ். இஸ்லாமியர்களின் பொற்காலம் என அழைக்கப்படும் கிபி 810-யில், அப்போது உலகின் அறிவியல் மையமாக திகழ்ந்த ஸ்பெயினின் அல்-அண்டலூசியா பிறந்தார்.
மருத்துவம், வானியல் சாஸ்திரம், கவிதை, இசை என பல்துறை வித்தகராக இருந்த அப்பாஸ், பொறியியல் துறையில் மாமேதையாக திகழ்ந்தவர். இவர் தான் முதல் முறையாக விமானத்தை வடிவமைத்து, அதில் பறந்தும் காட்டியவர். இவரை முன்னோடியாக கொண்டு தான் ரைட் சகோதரர்கள் விமானத்தை வடிவமைத்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
ஒருநாள் முதல் பாராசூட் பரிசோதனையை அப்பாஸ் கண்டார், இது அவருக்கு விமானத்தை உருவாக்குவதற்கான தூண்டுதலைக் கொடுத்தது. அதாவது மனிதர்களும் பறவைகளைப் போல் பறக்க உதவக்கூடிய இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தார். பறக்கும் இயந்திரத்தை வடிவமைக்க ஒன்றல்ல… இரண்டல்ல… 23 ஆண்டுகளை செலவிட்டார். இறுதியாக தனது 70வது வயதில் மரம் மற்றும் இறகுகளால் செய்யப்பட்ட ஒரு ஜோடி இறக்கைகளை உருவாக்கினர்.
இதுதான் உலகத்தின் முதல் விமானமாகும். அதனை வடிவமைத்து, உருவாக்கியது மட்டுமின்றி 10 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து சாகமும் செய்துள்ளார். ஆனால் அப்பாஸின் பறக்கும் இயந்திரத்தில் முறையான தரையிறங்கும் வசதி இல்லாததால் தரையில் மோதி லேசான காயம் ஏற்பட்டது. இதற்கான தீர்வை அவர் பின்னாட்களில் கண்டறிந்தாலும், அதனை செயல்படுத்த முடியாமல் போனது. ஏனெனில் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் தனது 77வது வயதில் மரணமடைந்தார்.
அறிவியல், தொழில்நுட்பத்தின் மீதான அப்பாஸின் ஆர்வம் பறக்கும் இயந்திரத்தை மட்டுமல்ல பல புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டறிய வழிவகை செய்துள்ளது. பார்வை திறனை மேம்படுத்த உதவும் கிளியர் கிளாஸ், நீர் கடிகாரம், பாறை படிகத்தை வெட்டுவதற்கான கருவி ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
இவரது நினைவுகளை பறைசாற்றும் வகையில் பாக்தாத்தில் இவர் பெயரில் ஒரு விமான நிலையமும், கோர்டோபாவில் ஒரு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.