ஈரான் ஐ.நா. தூதருடன் எலான் மஸ்க் திடீர் சந்திப்பு!

ஐ.நா.விற்கான ஈரான் தூதரருடன் எலான் மஸ்க் சந்திப்பு…
தெஹ்ரான் -வாஷிங்டன் இடையிலான பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை…
காசா மற்றும் லெபனானைத் தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் ஈரானை குறிவைத்து வருகின்றன. அதேபோல் லெபனானைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவுவதற்காக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி இந்த போரில் அமெரிக்கா களமிறங்கினால், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கக்கூடும். இதனால் மத்திய கிழக்கில் தொற்றியுள்ள பதற்றம் அடுத்த உலகப்போராக மாறக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் ஐ.நாவிற்கான ஈரான் தூதரான அமீர் சயீத் இரவானியை, டொனால்ட் டிரம்புடன் நெருங்கிய நட்புறவில் இருப்பவரான எலான் மஸ்க் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரகசிய இடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது எலான் மஸ்க், அமீர் சயீத் இரவானியிடம், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்பிற்கோ அல்லது அவரது குடியரசுக் கட்சிக்கோ இஸ்ரேலின் பழமைவாதிகளின் மோசமான அணுகுமுறை பிடிக்கவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதும், இந்த சந்திப்பு தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.