குட்டிகளை காப்பதற்காக சிங்கத்தை எதிர்த்து சீற்றத்துடன் சண்டையிட்ட அம்மா சிறுத்தை!

சிறுத்தை குட்டிகளை வேட்டையாட வந்த ஆண் சிங்கம்…
கடும் சண்டையிட்டு துரத்திய பெண் சிறுத்தையின் வீடியோ வைரல்…
ஒரு தாய் சிறுத்தை தனது குட்டிகளைப் பாதுகாப்பதற்காக சிங்கத்துடன் கடுமையாக சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோழி கூட தனது குஞ்சுகளை தூக்க வரும் கழுகை எதிர்த்து நின்று வீரமாக சண்டையிடும். அந்த அளவிற்கு சாந்தமான பறவைகள், விலங்குகள் என எதுவாக இருந்தாலும் தனது குட்டிக்கு ஒரு பிரச்சனை என வந்துவிட்டால், தன்னைவிட பல மடங்கு பெரிய சைஸ் எதிரியைக் கூட அடித்து தும்சம் செய்ய தயங்குவது கிடையாது.
அந்த வகையில் ஆக்ரோஷமான பெண் சிறுத்தை ஒன்று தனது குட்டிகளை வேட்டையாட வந்த சிங்கத்தை அடித்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான்சானியாவில் உள்ள செரெங்கேட்டி தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரி செய்த ஒரு ஜோடி பதிவு செய்த வீடியோ பிரமிக்க வைக்கிறது. அந்த வீடியோ ஒரு தாய் தனது குழந்தைக்காக எவ்வளவு தூரத்திற்கு போராடுவாள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
குகைக்குள் இருந்த சிறுத்தை குட்டிகளை வேட்டையாட நீண்ட நேரமாக ஒரு ஆண் சிங்கம் உளவு பார்க்கிறது. அப்போது “முடிஞ்சா என்னைத் தாண்டி தொடுடா பார்க்கலாம்” என்பது போல், திடீரென குகைக்கு முன் வந்து நிற்கிறது சிறுத்தை குட்டிகளின் தாய் சிறுத்தை. பெண் சிறுத்தையை ஈசியாக சமாளித்துவிடலாம் என நினைத்து ஆண் சிங்கம் முன்னேறுகிறது.
ஆனால் தனது குட்டிகளின் என்ன ஆனாலும் காப்பாற்றியே தீருவேன் என உறுதியேற்ற பெண் சிறுத்தை, ஆண் சிங்கத்தின் மீது பாய்ந்து கடுமையாக போராடுகிறது. இந்த போராட்டத்தில் கடைசியாக தோற்ற ஆண் சிங்கம் வந்த திசையிலேயே தெறித்து ஓடுகிறது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அம்மான்னா சும்மா இல்ல என பாராட்டி வருகின்றனர்.