கலிபோர்னியா கடற்கரையில் மீண்டும் இறந்து கரை ஒதுங்கிய டூம்ஸ்டே ஃபிஷ் – சுனாமி அறிகுறியா?

பொதுவாக கடலில் லட்சக்கணக்கான மீன் இனங்கள் காணப்படும். ஆனால் கடவுளின் மீன் என்றழைக்கப்படும் இந்த ஓர் ஃபிஷ் பெயரால் மட்டுமல்ல உருவத்திலும் விசித்திரமானது. இதற்கு டூம்ஸ்டே ஃபிஷ் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கடவுளின் மீன் என அழைக்கப்படும் இது விசித்திரமான வடிவமும், அசாத்திய நீளமும் கொண்டது.
இந்த மீன் 12 முதல் 30 அடி நீளம் வரை வளரக்கூடியது. பொதுவாக இந்த மீனை பார்ப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் இது கடலில் மிதமான அல்லது வெப்பமண்டல கடல் நீரில் வாழ்கிறது 200 மீட்டர் வரையிலான ஆழத்தில் வசிக்கக்கூடியது. அப்படிப்பட்ட அபூர்வ மீன், இறந்து கரை ஒதுங்கியுள்ளது அபசகுணமாக பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாட்டுப்புறக் கதைகளின் படி, இந்த மீன் மனிதர்களின் கண்களில் தென்பட்டாலே சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானில் 2011ம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிற்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக 20 ஓர் ஃபிஷ்கள் ஜப்பான் கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்கின. அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 10ம் தேதி இந்த மீன் இறந்து கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த அபூர்வ மீனுக்கும், நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்துள்ளனர்.