சாலையில் இறந்து கிடந்த பூனை… கண்டுகொள்ளாத மனிதர்கள்…பாடம் கற்பித்த யானை…

மனிதர்களை விட சக உயிர்களை மதிப்பதில் விலங்குகள் எப்போது ஒரு படி மேலே இருப்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ…
மனிதனுக்கு 6 அறிவு என்று பெருமை பேசிக்கொள்கிறோம். சிரிக்க முடியும், சிந்திக்க முடியும், புதுமைகளை படைக்க முடியும் அதனால் சக உயிரினங்களை விட நம்மை நாமே உயர்வாக கருதுகிறோம். ஆனால் சக உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய குணம் மனிதர்களை விட விலங்குகளிடத்திலேயே அதிகமாக உள்ளது.
அதனை இணையத்தில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோ ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பரபரப்பான சாலை ஒன்று காண்பிக்கப்படுகிறது. அதன் நடுவில் யாருடைய வாகனத்திலோ அடிப்பட்டு இறந்த பூனையின் சடலம் கிடக்கிறது. கேட்பாறற்று கிடக்கும் அந்த சடலத்தின் மீது வேக, வேகமாக பறக்கும் கார்கள் கடந்து செல்கின்றன. அந்த சாலையில் செல்லும் ஒருவருக்கு கூட அந்த இறந்த ஜீவனின் உடலை சாலையோரம் தள்ளிவிடக்கூட நேரமில்லை. அதன் மீது பட்டும் படாமல் வாகனங்களை செலுத்துகின்றனர்.
அந்த சமயத்தில் அவ்வழியாக பாகன் ஒருவர் யானையுடன் நடந்து வருகிறார். பார்க்கவே பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட அந்த யானை, தனது கால்களுக்கு கீழ் கிடக்கும் அந்த இறந்த பூனையின் உடலை தாண்டிச் செல்லாமல், மரியாதையுடன் விலகி அந்த உடலைச் சுற்றி நடந்து செல்கிறது.
இந்த காட்சிகளைப் பார்க்கும் போது, யாருக்கு 6 அறிவு உள்ளது என்ற கேள்வியை எழுகிறது.