யமுனை ஆற்றில் பொங்கி பாயும் நச்சு நுரை – தரமற்றதாகும் தலைநகரம்!

டெல்லி யமுனை ஆற்றில் நச்சு நுரைகளுக்கு இடையே சத் பூஜை விழா நடைபெற்றது. இதில் தங்களது ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே நச்சு நுரையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளை நிற பனிப்படலம் போல் யமுனையில் நச்சு நுரை மிதக்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் இந்த நச்சு நுரை உருவாவதாகவும், இதனால் யமுனையில் அம்மோனியா, பாஸ்பேட் போன்ற மக்களுக்கு மிகவும் ஆபத்தான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நச்சு நுரையானது சுவாசம் மற்றும் சரும பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத் பூஜை விழாவை முன்னிட்டு, யமுனை ஆற்றின் நச்சு நுரைகளுக்கு நடுவே மக்கள் பூஜை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்றொரு வீடியோவில், இந்த நுரை உடல் நலத்திற்கு தீங்கிழைக்கக்கூடியது எனத் தெரிந்தும், பெண் ஒருவர் நுரையை விலக்கி விட்டு குளிப்பதும், அவரை திக்கான வெண்படலம் போன்ற நுரை மூடுவதும் பார்க்கவே அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அந்த பெண்மணி குளிப்பதோடு நிற்காமல், அந்த நுரைகளை அள்ளி ஷாம்பு போல பயன்படுத்தி தலையை அலசுகிறார், அவரைப் போலவே பல பெண்களும் தங்களது தலையில் படிந்துள்ள நுரையை அலசுகிறார்கள்.
யமுனை ஆற்றில் நுரை மிதப்பது ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வாகி விட்டதால், பக்தர்கள் அபாய எச்சரிக்கையை அலட்சியம் செய்வதும், அசுத்தமான நீரில் குளிப்பதும் அதிகரித்து வருகிறது.