ஆண் ஜிம் ட்ரெயினர், தையல்காரர்களுக்கு தடை கேட்கும் உ.பி. மகளிர் ஆணையம் – காரணம் என்ன?

உத்தரப்பிரதேசத்தில் ஆண் தையல்காரர்கள் இனி பெண்களின் உடல் அளவீடுகளை எடுக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு ஆண்கள் ஜிம், யோகா பயிற்சி அளிக்கக்கூடாது என்றும் மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ஜிம் பயிற்சியாளரால் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ள நிலையில்,இந்த விவகாரத்தை உ.பி. மகளிர் ஆணையம் கையில் எடுத்தது.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடந்த மகளிர் ஆணையக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி தரக்கூடாது, தையர்கடைகளில் பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக்கூடாது, முடி திருத்தம் செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஆண்கள் முடி திருத்தம் செய்யக்கூடாது, இவற்றை பெண் ஊழியர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளன.
மேலோட்டமாக பார்த்துவிட்டு இந்த பரிந்துரைகளை பலரும் சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகின்றனர். ஆனால் உத்தரபிரதேச மகளிர் ஆணையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜிம்களில் உள்ள ஆண் பயிற்சியாளர்களால் பெண்கள் தவறான நடந்தைகளுக்கு ஆளாகிறார்கள். இதை வீட்டில் இருப்பவர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டே இப்படிப்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
மற்றொருபுறம் இதுபோன்ற இடங்களில் பெண்களின் தேவை கட்டாயம் என்றாலும், ஆண் அல்லது பெண் பணியாளர்களில் யார் தேவை என்பதை தேர்ந்தெடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளன.