ஷாருக்கான் வீட்டு வாசலில் 95 நாட்கள் காத்திருந்த ரசிகர் – கடைசியில் நடந்தது என்ன?

சினிமா மீதும் அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இதனால் தான் பான் இந்தியா மட்டுமல்ல.. உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதில் பாலிவுட் மன்னன் ஷாருக்கானும் ஒருவர். அவருக்கு உலகம் முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஷாருக்கானின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் மற்றும் பட ரிலீசுக்கு முன்னதாக அவரைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு முன்பு லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் கூட்டத்தோடு கூட்டமாக ஷாருக்கானை ரசித்துவிட்டுச் செல்லாமல் அவரே நேரில் வந்து சந்திக்கும் அளவிற்கு ரசிகர் ஒருவர் செய்த சாகசம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஷாருக்கை சந்திப்பதற்காக வீட்டிற்கு வெளியே காத்துக்கிடந்துள்ளார். காத்திருப்பு என்றால் சாதாரண காத்திருப்பு கிடையாது. ஒன்றல்ல, இரண்டல்ல ஷாருக்கானின் மன்னத் இல்லம் முன்பு கிட்டத்தட்ட 95 நாட்கள் தவம் கிடந்திருக்கிறார். தனது பிரியமான நாயகனை நேரில் ஒருமுறையாவது பார்ப்பதற்காக.
தனது வீட்டின் முன்பு ரசிகர் ஒருவர் நீண்ட நாட்களாக காத்திருப்பதைக் கேள்விப்பட்ட ஷாருக்கான், உடனடியாக அவரை நேரில் அழைத்துச் சந்தித்துள்ளார். தனது ரசிகனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவருடன் நின்று ஷாருக்கான் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இருப்பினும் மற்றொருபுறம் குடும்பம், வேலையை எல்லாம் விட்டு விட்டு நடிகர் ஒருவரின் வீட்டின் முன்பு அவரைப் பார்ப்பதற்காக காத்திருந்த நபரின் செயல்கள் நெகட்டீவ் கமெண்ட்களையும் குவித்து வருகின்றன.